×

அதிக வரி, போலீஸ் அடக்குமுறை எதிர்த்து பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த ஸ்டிரைக்கில் வன்முறை

 


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிக வரி மற்றும் போலீஸ் அடக்குமுறையை கண்டித்து நடந்த வேலைநிறுத்த போராட்டத்தால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின் கட்டணத்திற்கு அதிகப்படியான வரி விதிக்கப்பட்டதை கண்டித்து ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கை குழு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நியாயமற்ற வரிவிதிப்பை எதிர்த்து மே 11ம் தேதி மாகாணம் முழுவதில் இருந்து முசாபராபாத்துக்கு மக்கள் குவித்து மெகா பேரணி நடத்தப்படும் என அவாமி அமைப்பு அறிவித்திருந்தது. இந்த பேரணியை சீர்குலைக்க, ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் அரசு கூடுதல் போலீஸ் படைகளை குவித்திருந்தது.

இதற்கிடையே திடீர் நடவடிக்கையாக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி சுமார் 70 பிரதிநிதிகளை சிறை பிடித்தனர். போலீசாரின் இந்த அராஜகத்தை கண்டித்தும், வரி விதிப்பை எதிர்த்தும் அவாமி அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அனைத்து கடைகளும் மூடப்பட்டு, வாகனங்கள் இயங்கவில்லை. சமாஹ்னி, செஹான்சா, மிர்பூர், ராவலகோட், குய்ராட்டா, தத்தபானி, ஹட்டியான் பாலா போன்ற பகுதிகளில் பொதுமக்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். பதிலடியாக மக்கள் கற்களை வீசி போலீசை தாக்கினர். இதனால் பல இடங்களில் வன்முறை வெடித்தது.

The post அதிக வரி, போலீஸ் அடக்குமுறை எதிர்த்து பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த ஸ்டிரைக்கில் வன்முறை appeared first on Dinakaran.

Tags : Pak ,Occupied Kashmir Strike ,ISLAMABAD ,Pakistan ,Kashmir ,Jammu ,Occupied Kashmir ,Occupied ,Dinakaran ,
× RELATED அதிக வரிவிதிப்பால் 2019 முதல்...