×

4ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 1,710 பேரில் 360 பேர் மீது கிரிமினல் வழக்கு: 476 பேர் கோடீஸ்வரர்கள்; 24 பேரிடம் சொத்து இல்லை

புதுடெல்லி: 4ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,710 வேட்பாளர்களில் 360 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும், 476 பேர் கோடீஸ்வரர்களாகவும், 24 பேரிடம் சொத்து ஏதும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் முதல்கட்டமாக 102 மக்களவை தொகுதிக்கும், இரண்டாவது கட்டமாக 89 தொகுதிக்கும், மூன்றாவது கட்டமாக 93 தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் நாளை மறுநாள் (மே 13) நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்த நான்காம் கட்ட மக்களவை தேர்தலில் 1,710 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் 360 வேட்பாளர்கள் மீது அதாவது 21 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், ‘நான்காவது கட்டமாக நடக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 274 வேட்பாளர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 17 பேருக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 11 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகள் உள்ளன. 50 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் 5 வேட்பாளர்கள் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளன.

முக்கிய அரசியல் கட்சிகளில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் மூன்று வேட்பாளர்களில் 3 பேர், சிவசேனாவின் மூன்று வேட்பாளர்களில் இருவர், பாரத் ராஷ்டிர சமிதியின் 17 வேட்பாளர்களில் 10 பேர், காங்கிரஸ் கட்சியின் 61 வேட்பாளர்களில் 35 பேர், பாஜகவின் 70 வேட்பாளர்களில் 40 பேர், தெலுங்கு தேசம் கட்சியின் 17 வேட்பாளர்களில் 9 பேர், பிஜு ஜனதா தளத்தின் 4 வேட்பாளர்களில் 2 பேர், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 4 வேட்பாளர்களில் 2 பேர், சிவசேனாவின் (உத்தவ்) 4 வேட்பாளர்களில் 2 பேர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் 25 பேரில் 12 பேர், திரிணாமுல் காங்கிரசின் 8 பேரில் மூன்று பேர், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த 19 பேரில் 7 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளன.

கிரிமினல் வழக்குகளைத் தவிர, மொத்தமுள்ள 1,710 வேட்பாளர்களில் 476 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதாவது சொத்து மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் உள்ளவர்களாக உள்ளனர். மேலும் 24 வேட்பாளர்கள் தங்களிடம் சொத்து ஏதும் இல்லை என்று அறிவித்துள்ளனர்’ என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 4ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 1,710 பேரில் 360 பேர் மீது கிரிமினல் வழக்கு: 476 பேர் கோடீஸ்வரர்கள்; 24 பேரிடம் சொத்து இல்லை appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி