×

திருப்பதி அருகே தேர்தல் பிரசாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் மீது கல்வீச்சு

*எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டு

திருமலை : ஆந்திராவில் வரும் 13ம்தேதி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒரேகட்டமாக நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் கட்சியின் தலைவர்கள் அனல்பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் பிரசாரங்களில் அடிக்கடி கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதேபோல் நேற்றுமுன்தினம் திருப்பதி அருகே கல்வீச்சு நடந்தது. அதன் விவரம்:

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்ற தொகுதி ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் மதுசூதனரெட்டி. இவருக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் பொஜ்ஜல கோபாலகிருஷ்ணரெட்டியின் மகன் சுதிர்ரெட்டி போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.இந்நிலையில் கடந்த மாதம் வேட்பாளர் சுதிர்ரெட்டி பிரசாரம் செய்தபோது அங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கத்தி மற்றும் கற்களுடன் நுழைந்தார். அவரை தெலுங்கு தேசம் கட்சியினர் விரட்டியடித்தனர்.

இந்நிலையில் காளஹஸ்தி அருகே உள்ள ஏர்ப்பேடு பகுதியில் நேற்றுமுன்தினம் மதுசூதனன் பிரசாரம் செய்தார். அவரை ஆதரித்து மாநில பிற்படுத்தப்பட்டோர் உரிமை போராட்ட தலைவர் கிருஷ்ணய்யா திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் பிரசார ஜீப்பின் பின்பகுதியில் நின்றபடி எம்எல்ஏவும் வேட்பாளருமான மதுசூதனரெட்டி மீது கல்வீசினார். ஆனால் அந்த கல் கிருஷ்ணய்யாவின் முதுகில் விழுந்தது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

எம்எல்ஏ காயமின்றி தப்பினார். அதற்குள் கல் வீசிய நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.தொடர்ந்து கிருஷ்ணய்யா பேசுகையில், `வாக்கு வங்கிக்காக மிரட்டுவது, தாக்குவது போன்ற அநாகரீகமான செயல்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பின்னால் இருந்து கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். தைரியம் இருந்தால் முன்னால் வந்து தாக்கவேண்டும். பின்னால் தாக்குவது கோழைத்தனமானது’ என்றார். இதனிடையே சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஏர்ப்பேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் மீது கல்வீச்சு நடந்தது. இதேபோல் சந்திரபாபு மற்றும்பவன் கல்யாண் ஆகியோரது கூட்டங்களிலும் கல்வீச்சு நடந்தது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பதி அருகே தேர்தல் பிரசாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் மீது கல்வீச்சு appeared first on Dinakaran.

Tags : Stones ,YSR Congress ,Tirupati ,Tirumala ,13th assembly ,elections ,Andhra Pradesh ,Stone ,
× RELATED தேர்தல் பிரசாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்....