×

அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது

*பீரோ, கட்டில் சேதம்

அருமனை : அருமனை அருகே மாங்கோடு, வெட்டுக்குழி பகுதியில் சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் பரவலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் அப்துல் ரகுமான் (75) என்பவரது வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது.அப்போது அந்த வீட்டில் யாருமில்லை. அப்துல் ரகுமான் குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தார். இதனால் மின்கசிவு காரணமாக ஓடுகளால் வேயப்பட்ட வீட்டின் மேற்கூரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சிறிது நேரத்தில் ஓடுகள் சரசரவென வீட்டுக்குள் உடைந்து விழுந்தன. வீட்டின் உள்ளேயும் தீ பரவியதால் அங்கிருந்த பீரோ மற்றும் கட்டிலும் தீயில் கருகி நாசமானது. வீட்டின் மேற்கூரையில் தீப்பிடித்து எரிந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

பின்னர் வீட்டுக்குள்ளேயும் எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வெளியூர் சென்றிருந்த அப்துல் ரகுமானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பதறியடித்து ஊர் திரும்பிய அவர் இது சம்பந்தமாக அருமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இடி-மின்னல் காரணமாக அப்துல் ரகுமான் வீடு மட்டுமின்றி அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மின்விளக்குகள், மின்விசிறிகள் பழுதாகியுள்ளன.

The post அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது appeared first on Dinakaran.

Tags : Arumani ,BIRO ,ARUMANAI ,MANGODU ,CUTTUCULHI AREA ,Abdul Raguman ,Aruman ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக குமரி நடுவே அமைந்துள்ள...