×

திருச்சுழி அருகே வைக்கோல் படப்பில் தீ பிடித்தது

திருச்சுழி, மே 11: திருச்சுழி அருகே வைக்கோல் படப்பில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சுழி அருகே மிதலைக்குளத்தை சேர்ந்தவர் அங்குசாமி(60). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் நரிக்குடி பகுதியில் உள்ள விவசாயிகளிடமிருந்து மாட்டு தீவனத்திற்காக சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் கட்டுகளை விலைக்கு வாங்கி கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இரண்டு படப்புகளாக குவித்து வைத்து பராமரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் இன்னும் சிலர் வைக்கோல் படப்புகள் வைத்துள்ளனர்.

இந்நிலையில் அங்குசாமிக்கு சொந்தமான படப்பு நேற்று திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. பொதுமக்கள் திரண்டு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். தீ பரவியதால் திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலைய அலுவலர் முனீஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வைக்கோல் படப்பில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பை போராடி அணைத்தனர்.
இதில் அங்குச்சாமிக்கு சொந்தமான படப்பு முழுவதும் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் பக்கத்தில் போடப்பட்டிருந்த வைக்கோல் படப்புகளுக்கு தீ பரவவில்லை. இது குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருச்சுழி அருகே வைக்கோல் படப்பில் தீ பிடித்தது appeared first on Dinakaran.

Tags : Angusamy ,Mithalaikulam ,Narikudi ,Dinakaran ,
× RELATED நரிக்குடி அருகே தொழிலாளியை அரிவாளால்...