×

தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களை வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க ஓஆர்எஸ் கரைசல் வழங்க வேண்டும்:கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம், மே 11: காஞ்சிபுரத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களை வெப்ப அலையிலிருந்து பாதுகாப்பதற்கு, அந்தந்த நிர்வாகம் சார்பில் ஓஆர்எஸ் மற்றும் உப்பு, சர்க்கரை கரைசல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து, தற்போது வெப்ப அலையாக வீசி அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் சார்பில், கோடை வெப்பம் அலையில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வெப்ப தாக்கத்தை எதிர்கொள்ள குடிநீர் குடில்கள், ஓஆர்எஸ் திரவக் கரைசல் ஆகியன மக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிறுவப்பட்டுள்ளன.

இப்பணி பொது சுகாதாரத்துறை மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, நேரடியாக வெயிலில் பணியாற்றுபவர்கள், தொழிற்சாலை நிறுவனங்கள், தொழிலகங்கள், கட்டிட தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், காவல் துறை, தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள் மிக மிக கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக, தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வெப்ப தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த நிர்வாகம் சார்பில் குடிநீர் குடில்கள், ஓஆர்எஸ் திரவக் கரைசல் அல்லது உப்பு சர்க்கரை கரைசல் (1 லிட்டர் நீரில் உப்பு – 1 தேக்கரண்டி, சர்க்கரை 6 தேக்கரண்டி) போன்ற நீரிழப்பை ஈடுசெய்யும் திரவக்கரைசல்களை தொழிலகங்களில் ஆங்காங்கே அமைத்திட ஆவண செய்ய வேண்டும்.

இதுகுறித்து தொழிற்சாலை தகவல் பலகைகளில் வெப்ப அலைகளுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளை அறிவிப்பாக வெளியிட வேண்டும். தொழிற்சாலைகளில் மருந்தகங்கள், டிஸ்பென்சரிகள் இருப்பின் அவ்விடங்களில் வெப்ப அலையை எதிர்கொள்ள போதிய அவசரகால மருந்து பொருட்களை வாங்கி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.கோடைகால வெப்ப அலையை தடுக்க வேண்டியவை: உடலில் நீர்சத்து குறையாமல் தேவையான அளவு தண்ணீர் குடித்தல், பயணத்தின்போது குடிநீரை எடுத்து செல்லுதல், ஓஆர்எஸ், எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடித்தல், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிதல், வெளியே செல்லும்போது காலணிகள், தொப்பிகள் அணிதல், மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடையை கொண்டு செல்லுதல் போன்ற வழிகாட்டல்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.எவரேனும் வெப்ப அலையினால் பாதிக்கப்படுவாராயின் மருத்துவ உதவிக்கான 108 இலவச சேவை எண்ணை பயன்படுத்தி, மேல் சிகிச்சை மேற்கொள்ள அருகிலுள்ளவர்கள் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களை வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க ஓஆர்எஸ் கரைசல் வழங்க வேண்டும்:கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ORS ,Kanchipuram ,Kalachelvi Mohan ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...