×

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி தீர்த்தது: மரங்கள் முறிந்து விழுந்தன; நெற்பயிர்கள் சேதம்

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ேகாடை மழை இன்று அதிகாலை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நெய்பயிர்கள் சேதமாயின. தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் 2 மாதங்களுக்கு முன்பே வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. மேலும், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் தினமும் சதம் அடித்து வருகிறது. இதனால் வெப்ப அலை வீசுவதால் பகல் நேரத்தில் மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரத்துக்கு முதல் மூன்று நாட்களில் 110 டிகிரியை தாண்டியது. இந்த நிலை தற்போது நீடித்து வருவதுடன், வெப்ப அலையின் தாக்கமும் மக்களை அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை நீடித்து வந்த வெயில் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இருப்பினும் நேற்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை காட்டிலும் 3டிகிரி முதல் 5டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் உள்பட 14 மாவங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கனமழை பெய்தது. அணியாலை, காம்பட்டு, பூண்டி, மேலாரணி, வில்வாரணி, சோழவரம், மட்டவெட்டு, பட்டியந்தல், சிறுவள்ளூர் மற்றும் சுற்றுபுற கிராமங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 7 மணி வரை விடாமல் பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. காலை 7 மணி நிலவரப்படி கலசப்பாக்கத்தில் 27 மி.மீ.மழை பதிவானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6,500 ஹெக்டர் பரப்பளவில் நெல் பயிரிட்டிருந்தனர். பல்வேறு கிராமங்களில் அறுவடை பணிகள் நடந்து வந்தது. திடீரென மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமானது. அதேபோல் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் மூட்டைகளாக கட்டி விற்பனைக்காக வைத்திருந்தனர். இந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. போளூரில் நள்ளிரவு 1 மணி முதல் விடியவிடிய பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள், விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது. திருவண்ணாமலையில் அதிகாலை 5 மணி முதல் மிதமான மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்தது. மண்டலவாடி, பொன்னேரி, பாச்சல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரில் 6.4 மி.மீ, மாதனூரில் 5.3மி.மீ, ஆலங்காயத்தில் 3மி.மீ, நாட்றம்பள்ளியில் 43மி.மீ, கேதாண்டப்பட்டியில் 19மி.மீ, திருப்பத்தூரில் 2.2மி.மீ என மாவட்டம் முழுவதும் 73 மில்லி மீட்டர் மழை பதிவானது.

வேலூர்
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அகரம், பள்ளிகுப்பம், கீழ்கிருஷ்ணாபுரம், குருவராஜபாளையம், மராட்டிபாளையம், மேலரசம்பட்டு, ஆசனாம்பட்டு, கீழ்கொத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணியளவில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது, குருவராஜபாளையம் பகுதியில் வேலூர்-ஒடுகத்தூர் செல்லும் சாலையில் புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சாலையானது வேலூரில் இருந்து அணைக்கட்டு வழியாகவும், குடியாத்தத்தில் இருந்து மாதனூர், பாலூர், அகரம் வழியாக குருவராஜபாளையம், ஒடுகத்தூர், ஆசனாம்பட்டு, வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளுக்கு செல்லக்கூடியது. மரம் விழுந்ததால் 1 கிமீ தூரமுள்ள அகரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து அகரம், பாலப்பாடி வழியாக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சாலையில் விழுந்துள்ள மரத்தை அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது.

கே.வி.குப்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இன்று அதிகாலை இடி மின்னல் மற்றும் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்களும் முறிந்து சேதமானது. கீழ் ஆலத்தூர், அர்ஜூனாபுரம், செண்ணங்குப்பம், கே.ஏ.மோட்டூர் ஆகிய பகுதிகளில் காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை, கீழ் ஆலத்தூர்-நாகல் சாலை, பசுமாத்தூர்-அர்ஜூனாபுரம் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. தகவலறிந்த நெடுஞ்சாலை துறை, மின்வாரிய துறை, காவல் துறையினர், வருவாய் துறையினர் சம்பவ இடங்களுக்கு சென்று ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை 5 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): வேலூர் 42.20, சத்துவாச்சாரி 38, ஒடுகத்தூர் 120, குடியாத்தம் 37.40, மேலாலத்தூர் 70.20, மோர்தானா அணை 25, ராஜாதோப்பு 13, வடவிரிஞ்சிபுரம் 28.40, காட்பாடி 37.20, பேரணாம்பட்டு 42.40. மாவட்டத்தில் பதிவான மொத்த மழை அளவு 453.80 மி.மீ., சராசரி மழை அளவு 37.82 மி.மீ.

The post வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி தீர்த்தது: மரங்கள் முறிந்து விழுந்தன; நெற்பயிர்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tiruvannamalai ,Tirupathur ,Ekadai ,Tamil Nadu ,
× RELATED சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே...