×

சேலத்தில் வீட்டு பூட்டை உடைத்து கைவரிசை; வெள்ளி வியாபாரியின் 2வது மனைவி வீட்டில் 60 பவுன், ரூ.65 லட்சம் கொள்ளை

சேலம்: சேலத்தில் வெள்ளி வியாபாரியின் 2வது மனைவி வீட்டில் 60 பவுன் நகை, ரூ.65 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் பாபுலால் (64), வெள்ளி வியாபாரி. இவரது 2வது மனைவி சரோஜா (59), அம்மாபேட்டை நெ.1 பிள்ளையார்கோயில் தெருவில் வசித்து வருகிறார். இந்த வீட்டிற்கு வெள்ளி வியாபாரி பாபுலால், அவ்வப்போது வந்து செல்வார். இதனால், சரோஜா மட்டும் தனியாக வசித்து வருகிறார். கடந்த 2ம் தேதி சரோஜா, சேலம் சங்கர்நகரில் உள்ள தனது மகள் பிரியாவின் வீட்டிற்கு சென்று விட்டு மதியம் திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு சாத்தப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ, லாக்கர், கபோர்ட் பகுதியில் வைத்திருந்த 60 பவுன் நகை, ரூ.65 லட்சம் ரொக்கப்பணம், 10 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டு, மோப்பம் பிடிக்கப்பட்டது.

இந்த கொள்ளையில் 3 பேர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். கொள்ளை நடந்த வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை கொள்ளையர்கள் எடுத்து சென்றுவிட்டதால், அந்த தெருவில் பிற இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சரோஜா, தன்னிடம் உள்ள பணத்தை கொண்டு வட்டிக்கு விடும் தொழிலை செய்து வந்துள்ளார். இதனால், அடிக்கடி அவரது வீட்டிற்கு வெளியாட்கள் வந்து பணத்தை வாங்கி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் ஆட்டோவில் வந்து சென்றுள்ளனர். இதன் காரணமாக சரோஜாவிடம் மிக அதிகளவு பணம், நகை இருக்கிறது என்பதை அறிந்த நபர்கள் மூலமே இக்கொள்ளை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர்.

மேலும் சரோஜாவின் வீட்டில் 2 பெண்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களில் ஒரு பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. காரணம் அந்த பெண், ஒரு ஆணுடன் பைக்கில் சரோஜாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அதனால், அவர்கள்தான் இக்கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அம்மாபேட்டையை சேர்ந்த அப்பெண்ணையும், அவருடன் வந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் சொத்தை விற்ற பணம்: சரோஜாவின் சொந்த ஊர் டெல்லி. வெள்ளித்தொழில் சம்பந்தமாக டெல்லிக்கு அடிக்கடி சென்று வந்த பாபுலால், அங்கிருந்து சரோஜாவை 2வதாக திருமணம் செய்து கொண்டு, சேலம் வந்துள்ளார். பிறகு அம்மாபேட்டையில் தனி வீட்டில் குடி வைத்துள்ளார். அவர்களது ஒரு மகளையும் சேலத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அந்த மகளின் வீடு சங்கர்நகரில் உள்ளது. சமீபத்தில் டெல்லிக்கு சென்ற சரோஜா, அங்குள்ள தனது பூர்வீக சொத்தை விற்று ரூ.70 லட்சத்திற்கு மேல் பணத்தை கொண்டு வந்துள்ளார். அந்த பணத்தில் இருந்துதான், ரூ.65 லட்சம் கொள்ளை போயுள்ளது என போலீசில் சரோஜா கூறியுள்ளார்.

The post சேலத்தில் வீட்டு பூட்டை உடைத்து கைவரிசை; வெள்ளி வியாபாரியின் 2வது மனைவி வீட்டில் 60 பவுன், ரூ.65 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Salem ,Babulal ,Salem Sewwaipet ,Dinakaran ,
× RELATED சேலத்தில் வெள்ளி வியாபாரி வீட்டில் ரூ.65 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை