×

கொல்லம் அருகே பரிதாபம் குட்டையில் மூழ்கி தம்பதி உள்பட 3 பேர் பலி: தோழியை காப்பாற்றும் முயற்சியில் அடுத்தடுத்து மூழ்கினர்

 

திருவனந்தபுரம், மே 5: கொல்லம் அருகே குட்டையில் குளிக்கச் சென்ற தோழி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற தம்பதியும் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சபீர் (40). இவரது மனைவி சுமையா (35). இவர்கள் இருவரும் நேற்று கொல்லம் பள்ளித்தோட்டம் பகுதியில் வசிக்கும் இவர்களது நண்பரான அர்ஷாத் என்பவரின் வீட்டுக்கு சென்றிருந்தனர்.

இதையடுத்து சபீர், சுமையா, அர்ஷாத் மற்றும் அர்ஷாத்தின் மனைவி சஜினா (30) ஆகியோர் சேர்ந்து அருகிலுள்ள நீர் நிரம்பிய குட்டையில் குளிப்பதற்காக சென்றனர். முதலில் சஜினா குட்டையின் நடுப்பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் சகதியில் சிக்கி தண்ணீரில் மூழ்க தொடங்கினார். கையை வெளியே நீட்டியவாறு கூக்குரலிட்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சபீரும், சுமையாவும் சேர்ந்து சஜினாவை காப்பாற்றுவதற்காக குட்டையின் நடுப்பகுதிக்கு சென்றனர்.

ஆனால் அவர்களும் அடுத்தடுத்து சகதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். இவர்களது கூக்குரலைக் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் கொல்லம் தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று குட்டைக்குள் இறங்கி 3 பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சஜினா, சபீர், சுமையா ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கொல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொல்லம் அருகே பரிதாபம் குட்டையில் மூழ்கி தம்பதி உள்பட 3 பேர் பலி: தோழியை காப்பாற்றும் முயற்சியில் அடுத்தடுத்து மூழ்கினர் appeared first on Dinakaran.

Tags : Paritapam ,Kollam ,Thiruvananthapuram ,Sabir ,Thiruvananthapuram, Kerala ,Sumaiya ,
× RELATED கேரளாவில் பலத்த மழை: படகு கவிழ்ந்து மீனவர் பலி