×

தேனி அருகே வேன் கவிழ்ந்து சென்ட்ரிங் தொழிலாளி பலி: 2 பேர் படுகாயம்

 

தேனி, மே 3: தேனி அருகே உள்ள வீருசின்னம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் நந்தகோபால் மகன் கேசவன் (20). வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் முத்துச்செல்வம் (28), மஞ்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மொக்கைச்சாமி (60). இவர்கள் அனைவரும் சென்ட்ரிங் தொழிலாளர்கள். இவர்கள் வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்த சென்ட்ரிங் காண்ட்ராக்டர் ராமுவிடம் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் மதியம் ஊத்துப்பட்டியில் இருந்து சென்ட்ரிங் மோல்டுகளை வேனில் ஏற்றிக்கொண்டு மூவரும் வேனில் சென்றனர்.

வேனை சின்னமனூர் அருகே உள்ள முத்துலாபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் சுப்பிரமணி (28) என்பவர் ஓட்டினார். வேன் கோட்டூர் அடுத்த தனியார் பண்ணை அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் மொக்கைச்சாமி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். கேசவன், முத்துச்செல்வம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த வீரபாண்டி போலீசார், மொக்கைச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காகவும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கேசவன் அளித்த புகாரின்பேரில், வீரபாண்டி போலீசார் ஓட்டுநர் சுப்பிரமணி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post தேனி அருகே வேன் கவிழ்ந்து சென்ட்ரிங் தொழிலாளி பலி: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Nandagopal ,Kesavan ,Veeruchinnammalpuram ,Palaniswami ,Muthuchelvam ,Vazaiyathupatti ,Mokkaichami ,Manchinayakkanpatti ,Van ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை