×

கோடைக்காலத்தையடுத்து இந்தாண்டு மோர் விற்பனை 25 சதவீதம் அதிகரிப்பு: ஆவின் நிர்வாகம் தகவல்

சென்னை: கோடைக்காலத்தையொட்டி இந்தாண்டு ஆவின் மோர் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆவின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய், தயிர், இனிப்பு வகைகள், மில்க்ேஷக், ஐஸ்கிரீம் உட்பட 200க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக மிக கடுமையாக உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, பழச்சாறு, மோர், இளநீர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், ரோஸ்மில்க் உள்ளிட்டவைகளின் தேவை பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆவினில் தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்டவற்றின் உற்பத்தியை ஆவின் நிர்வாகம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்தாண்டை விட இந்தாண்டு மோர் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆவின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாக அதிகாரி கூறியதாவது: கோடை வெயிலின் போது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 40,000 மோர் பாட்டில், மோர் பாக்கெட் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 65,000 மோர் பாட்டில், மோர் பாக்கெட் விற்பனையாகியுள்ளது.

அதன்படி ஆவினில் 25 சதவீதம் இந்நதாண்டு மோர் விற்பனை அதிகரித்துள்ளது. இதுதவிர லஸ்ஸி, தயிர், ஐஸ் கீரிம் ஆகியவற்றின் விற்பனையும் கடந்தாண்டை விட இந்தாண்டு 15 முதல் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் ஆவின் பொருட்களின் விற்பனை மேலும் அதிகரிக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கோடைக்காலத்தையடுத்து இந்தாண்டு மோர் விற்பனை 25 சதவீதம் அதிகரிப்பு: ஆவின் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Awin ,Chennai ,Avin ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல்...