ஈரோடு, மே 1: ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 5 மையங்களில் நடந்து வந்த நீட் தேர்வு பயிற்சி நாளையுடன் (2ம் தேதி) நிறைவடைய உள்ளது. நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பு நுழைவுக்கான நீட் தேர்வு வரும் 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் 8 மையங்களில் 4,700 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.
அரசு பள்ளியில் பிளஸ் 2 பயின்று நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 236 மாணவ-மாணவிகளுக்கு கடந்த சில மாதங்களாக ஈரோடு, கோபி, பவானி, சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்பட்டு, காலை முதல் மாலை வரை பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.
இதேபோல் ஈரோட்டில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் (எலைட்) 74 மாணவ-மாணவிகள் என மொத்தம் 310 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத பயிற்சி பெற்று தயாராகி வருகின்றனர். நீட் தேர்வு வருகிற 5ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, மாவட்டத்தில் 5 இடங்களில் செயல்பட்ட வந்த நீட் தேர்வு பயிற்சி மைய வகுப்புகள் நாளை (2ம் தேதி) நிறைவடைய உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு appeared first on Dinakaran.