×

வேதாரண்யத்தில் நாளை உப்பு சத்தியாகிரக பேரணி: நினைவு ஸ்தூபி அருகே உப்பு அள்ளுகின்றனர்

வேதாரண்யம்: ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் உப்பு மீது விதித்த வரியை எதிர்த்து மகாத்மா காந்தி, 1930ம் ஆண்டு ஏப்ரலில் குஜராத் மாநிலம் தண்டியில் யாத்திரை நடத்தினார். இது தண்டி யாத்திரை என அழைக்கப்படுகிறது. அதே நாளில் திருச்சியில் இருந்து ராஜாஜி தலைமையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை யாத்திரை சென்று உப்பு அள்ளி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை உப்பு சத்தியாகிரக யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் பங்களா முன்புள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி அருகில் இருந்து 94வது ஆண்டு உப்பு சத்தியாகிரக யாத்திரை நேற்று புறப்பட்டது. இதில் 50க்கும் அதிகமான தியாகிகள் பங்கேற்றனர். திருச்சியில் துவங்கிய இந்த யாத்திரை நாளை வேதாரண்யத்தை சென்றடைகிறது. நாளை (30ம் தேதி) அகஸ்தியம்பள்ளி கடற்கரையில் உப்பு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதுகுறித்து மயிலாடுதுறை முன்னாள் எம்பி ராஜேந்திரன் கூறுகையில்,
‘‘உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் 33ம் ஆண்டு நினைவு பேரணி நாளை காலை 6.30 மணிக்கு வேதாரண்யம் உப்பு சத்தியகிரக நினைவு கட்டிடத்தில் இருந்து புறப்பட்டு அகஸ்தியன்பள்ளிக்கு சென்றடைகிறது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் ஒன்றிய அமைச்சர் தங்கபாலு, சுதந்திர போராட்ட தியாகியான சர்தாரின் பேரன் வேதரத்தினம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பங்கேற்கின்றனர். 5 கிமீ தூரம் வேதாரண்யத்தில் இருந்து அகஸ்தியன்பள்ளிக்கு நடந்து சென்று உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி அருகே உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது’’ என்றார்.

The post வேதாரண்யத்தில் நாளை உப்பு சத்தியாகிரக பேரணி: நினைவு ஸ்தூபி அருகே உப்பு அள்ளுகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Salt Satyagraha ,Vedaranyam ,Mahatma Gandhi ,Thandi ,Gujarat ,British ,Dandi Yatra ,Rajaji ,Trichy ,
× RELATED உப்பு சத்தியாகிரக போராட்ட 93ம் ஆண்டு...