×

சந்தேஷ்காலியில் வெடிபொருள் கண்டெடுப்பு; திரிணாமுல் கட்சிக்கு எதிராக சதி நடக்கிறது: பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: சந்தேஷ்காலியில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் குறித்து திரிணாமுல் கட்சியின் பாஜக குற்றம்சாட்டியதற்கு மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலியில் வெடிகுண்டுகள் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட பகுதியில் சிபிஐ சோதனை நடத்தியது. அந்த சோதனையில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் சிக்கின. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘சந்தேஷ்காலியில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை.

ஆர்டிஎக்ஸ் போன்ற வெடிபொருட்கள் கிடைத்துள்ளன. இத்தகைய பொருட்களை தீவிரவாதிகள் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த ஆயுதங்கள் அனைத்தும் சர்வதேச பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகின்றன. எனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைதியான மேற்குவங்க மாநிலத்தை அழிக்க திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிக்கிறது’ என்றார்.

இந்நிலையில் சந்தேஷ்காலியில் சிபிஐ நடத்திய சோதனை குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘சந்தேஷ்காலி பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் தலைவர் ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆதாரங்களை உருவாக்க சிபிஐ முயற்சிக்கிறது. திரிணாமுல் கட்சிக்கு எதிராக சதி நடக்கிறது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பது முற்றிலும் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. ரெய்டு நடத்தும் முன் மாநில காவல்துறையிடம் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. அதனால் அதன் பின்னணியில் சதி இருப்பதாக தெரிகிறது’ என்றார்.

The post சந்தேஷ்காலியில் வெடிபொருள் கண்டெடுப்பு; திரிணாமுல் கட்சிக்கு எதிராக சதி நடக்கிறது: பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Sandeshkali ,Mamata Banerjee ,BJP ,KOLKATA ,Mamata ,Trinamool ,West Bengal ,CBI ,Dinakaran ,
× RELATED சந்தேஷ்காலி போராட்டத்தில் பங்கேற்ற...