×

10 ஆண்டுகளில் முதல் முறையாக முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர் எண்ணிக்கை குறைந்தது: 2025ல் ப்ரஷ்ஷர்களுக்கு பாதிப்பு

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. இதனால், 2025ல் ஐடி துறையில் புதிதாக படித்து முடித்து வரும் இன்ஜினியர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சம்பளத்தையும் வேலைவாய்ப்பையும் அள்ளித்தரும் துறையாக தகவல் தொழில்நுட்ப (ஐடி) சேவைகள் துறை உள்ளது. இன்ஜினியரிங் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் ஐடி துறையில் வேலைக்கு செல்வதையே விரும்புகின்றனர்.

இந்நிலையில், ஃப்ரஷ்ஷர்களின் தலையில் இடி விழும் வகையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக 2023-24ம் நிதியாண்டில் இந்திய முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய 3 நிறுவனங்கள் தான் ஐடி பொறியாளர்களுக்கு வேலையை கற்றுத் தரும் நிறுவனங்களாக இருக்கின்றன. இந்நிறுவனங்கள் அதிகளவில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி இன்ஜினியரிங் முடித்து வெளியே வரும் மாணவர்களுக்கு வேலை கொடுத்து கோடிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கற்றுத் தருகின்றன.

இந்நிறுவனங்களில் கடந்த 10 ஆண்டாக ஊழியர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்த நிலையில், 2023-24ல் முதல் முறையாக குறையத் தொடங்கி உள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட டிசிஎஸ் இல் 13,249 ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது டிசிஎஸ் இல் கடந்த 19 ஆண்டில் நிகழாத ஒரு சம்பவம். இதே போல, இன்போசிஸ், விப்ரோவும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளன. கடந்த நிதியாண்டில் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி திவாலானது.

அதனால் அந்த வங்கியின் பல்வேறு புராஜெக்ட்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. இதனால் வருவாய் இழப்பை சந்தித்த பல நிறுவனங்கள் ஆட்குறைப்பை செய்தன. இவ்வாறு கடந்த நிதியாண்டில் ப்ரஷ்ஷர்களுக்கு வாய்ப்பளிப்பது குறைப்பட்டதன் மூலம் 3 இந்திய முன்னணி நிறுவனங்களிலும் ஊழியர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது அடுத்த ஆண்டிலும் தொடர வாய்ப்புள்ளதால் 2025ல் படித்து முடித்து வருபவர்களுக்கு வேலை கிடைப்பது, கேம்பஸில் பிளேஸ்மென்ட் அவ்வளவு எளிதாக இருக்காது என்கின்றனர் ஐடி ஹெச்ஆர்கள்.

* எதிர்கால திட்டம் என்ன?
டிசிஎஸ் நிறுவன ஹெச்ஆர் தலைவர் சமீபத்தில் பேட்டியில், ‘‘நாங்கள் 40,000 ஊழியர்களை புதிதாக பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் அது எப்போது தொடங்குவது என்பது 2 மாதத்திற்கு பிறகே முடிவு செய்வோம்’’ என கூறி உள்ளார். 2025ல் எத்தனை பேரை வேலைக்கு அமர்த்துவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என இன்போசிஸ் நிறுவனம் கூறி உள்ளது. டீம்லீஸ் டிஜிட்டல் நிறுவன வணிக தலைவர் கிருஷ்ணா விஜ் கூறுகையில், ‘‘ஐடி சேவை நிறுவனங்கள் புதிதாக பணியாளர்களை நியமிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கின்றன’’ என்றார்.

The post 10 ஆண்டுகளில் முதல் முறையாக முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர் எண்ணிக்கை குறைந்தது: 2025ல் ப்ரஷ்ஷர்களுக்கு பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,India ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...