×

மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்: 36 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில் கட்டப்படுகிறது

திருவாரூர்: திருவாரூர் மடப்புரத்தில் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. திருவாரூர் மடப்புரம் பகுதியில் இருந்து தஞ்சை சாலையை இணைக்கும் வகையில் ஓடும் போக்கி ஆற்றின் குறுக்கே நடைபாலம் ஒன்று கடந்த 40 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டு தற்போது வரையில் புழக்கத்தில் இருந்து வருகிறது.

தற்போது திருவாரூர் நகரம் மாவட்ட தலைநகரம் என்பதால் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் என நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர்கள் வரையில் இந்த நகரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மடப்புரம் நடைபாலம் என்பது அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமின்றி, தாலுக்கா அலுவலகம் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் உட்பட பலவற்றிற்கும் இந்த நடைபாலமானது முக்கிய பாலமாக இருந்து வரும் நிலையில் பெயரளவில் நடைபாலம் என்ற போதும் இந்த நடைபாலத்தில் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. மேலும் தற்போது புதிய பஸ் நிலையம் என்பது தஞ்சை சாலையை ஒட்டியவாறு மாற்றப்பட்டுள்ளதால் இதற்காக தற்போது இந்த பாலத்தினை அதிகம் பேர் பயன்படுத்தும் நிலையும் இருந்து வருகிறது.

இந்நிலையில் நகரின் வளர்ச்சிகேற்ப இந்த பாலத்தினை அகற்றி விட்டு 4 சக்கர வாகனம் செல்லும் வகையில் புதிய பாலம் கட்டி தர வேண்டும் என கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் வைக்கப்பட்ட கோரிக்கையை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே இந்த பாலமானது கடந்த 2 வருடத்திற்கு மேலாக கைப்பிடி சுவர் உட்பட பல்வேறு இடங்களில் பழுதடைந்து இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த நடைபாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டப்படும் என தற்போதைய திமுக அரசு மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது, இதற்கான அறிவிப்பை சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி 110ன் கீழ் அறிவித்தார். இந்த நடைபாலத்தினை கடந்தாண்டு ஆகஸ்ட் 27ம் தேதி நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நடைபாலம் அருகிலேயே புதிய பாலம் ஒன்று கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்புமாறும் அதற்குரிய நிதியை உடனடியாக வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நகராட்சி சார்பில் புதிய பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில் இதற்காக 2023, 24 நிதியாண்டு மூலதன மானிய நிதி திட்டத்திலிருந்து ரூ.4 கோடியே 6 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கு அரசு மூலம் அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த புதிய பாலமானது 36 மீட்டர் நீளத்திலும், 6 மீட்டர் அகலத்திலும் கட்டும் பணி தற்போது துவங்கியுள்ள நிலையில் இதற்கு தமிழக முதல்வர், அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

The post மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்: 36 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில் கட்டப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Odamboki River ,Madhapuram ,Thiruvarur ,Odambokki river ,Thiruvarur Madhapuram ,Bokki river ,Thanjavur ,Madappuram Odambokki river ,Dinakaran ,
× RELATED சஸ்பெண்ட் செய்யப்பட்ட செயல் அலுவலர் மீது நிதி முறைகேடு வழக்கு