×

ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு கோரி வழக்கு: தமிழக அரசு நிலைப்பாட்டை தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் மாவட்டம், கம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகண்ணு என்பவர் காவல் துறையினர் சித்ரவதையில் உயிரிழந்தார். இதையடுத்து, கணவரை மீட்டுத்தரக் கோரி ராஜகண்ணுவின் மனைவி பார்வதி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவின்படி, காவல் துறையினருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் போலீசாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் நீதிபதிகள் உத்தரவின்படி, இடைக்கால இழப்பீடாக ராஜகண்ணு மனைவிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும், ராஜகண்ணுவின் சகோதரி ஆச்சிக்கு 50 ஆயிரம் ரூபாயும், ஆச்சியின் மகன் குள்ளனுக்கு 25 ஆயிரம் ரூபாயும், மற்றொரு மகன் குளஞ்சியப்பன் உள்பட 5 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், காவல் துறையினரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் உறவினர்களான தங்களுக்கு பொது சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்கக் கோரி, ராஜகண்ணுவின் சகோதரி மகன் குளஞ்சியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது மகனுக்கு அரசு வேலை வழங்கவும், சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை மற்றும் நிவாரணங்கள் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பாரி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இறுதி இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும், சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை, அரசு வேலை வழங்குவது குறித்தும் தமிழக அரசு தனது நிலைபாட்டை தெரிவிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார். ராஜகண்ணு மரணத்துக்கு நீதி கேட்டு அவரது மனைவி பார்வதி, 1993ல் மூத்த வக்கீலும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான கே.சந்துரு மூலம் நடத்திய சட்ட போராட்டத்தை அடிப்படையாக கொண்டுதான் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

The post ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு கோரி வழக்கு: தமிழக அரசு நிலைப்பாட்டை தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Rajakannu ,Kammapuram ,Cuddalore district ,Parvathi ,Tamil Nadu govt ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...