×

அண்ணாமலையின் இங்க ஒரு வாய்… அங்க ஒரு வாய்… ‘ஜூன் 4க்கு பின் டிடிவி கைக்கு அதிமுக வரும்’

தேனி தொகுதியில் பாஜ கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி.தினகரனை ஆதரித்து நேற்று, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்து பேசியதாவது: அதிமுக தொண்டர்கள் வாக்கு டிடிவிக்குத்தான். அவர்கள் அமமுகவோடு இணையப் போகிறார்கள். பூச்சாண்டிகளையும், போலித்தலைவர்களையும் எந்த தொண்டனாக இருந்தாலும் கண்டுபிடித்து விடுவார்கள். இன்றைக்கு அப்படிப்பட்ட தலைவர்கள் தேர்தல் களத்தில் நின்று ஒருவருக்கொருவர் திட்டிக்கொள்வதை போல நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அதிமுக தொண்டர்கள் எல்லாம் டிடிவி தினகரனின் பின்பு அணிவகுத்து நிற்கப்போவது ஜூன் 4ம் தேதிக்கு பிறகு நடக்கத்தான் போகிறது. இதனை நான் ஓபனாகவே சொல்கிறேன். சொல்வதில் எந்த தயக்கமோ, பயமோ கிடையாது. மக்கள் செல்வாக்கு டிடிவிக்கு இருக்கிறது என்பதற்காக வெளியே நிறுத்தப்பட்டார். அதனால்தான் உறுதியாக சொல்கிறேன். 2024, ஜூன் 4ம் தேதிக்கு பிறகு, அதிமுக எந்த உண்மையான தலைவரின் கைக்கு வரவேண்டுமோ, அந்த உண்மையான தலைவரின் கைக்கு அது வரத்தான் போகிறது. அதுவரை கத்தலாம். கூச்சல்போடலாம். முன்னாள் அமைச்சர்கள் பத்து பேரை வச்சிக்கிட்டு பிரஸ்மீட்டை போட்டு திட்டலாம். ஆனால், தொண்டர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். யார் இங்கே எட்டப்பன் என்பதிலே தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

டிடிவி இன்றைக்கு நிற்கிறார் என்றால் மோடியிடம் நேரடியாக தொலைபேசியில் பேசுவார். தேனிக்கு என்ன வேண்டுமானாலும் தொலைபேசியிலேயே பேசி கொண்டு வந்துவிடுவார். அதிமுக வேட்பாளரை நீங்கள் எதற்கு நிற்கிறீர்கள் என கேட்டால் ஒன்றியத்தில் யாராவது ஆட்சி அமைப்பார்கள். நாங்கள் வலியுறுத்துவதற்காக போட்டியிடுகிறோம் என்கின்றனர். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் டிடிவியை பார்த்து 16 ஆண்டுகளுக்கு பிறகு வந்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அவர் வரவேண்டிய கட்டாயம் என்னன்னு கேட்கிறார். ராமன் போல வனவாசத்தை முடித்து விட்டு அரசியல் களத்தில் நின்று கொண்டிருக்கிறார். அதிமுக தொண்டர்கள் எல்லாம் எங்கள் பக்கம். தொண்டர்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

* ‘ஜூன் 4க்கு பின் ஓபிஎஸ் பக்கம் அதிமுக தொண்டர்கள் வருவார்கள்’
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜ கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நேற்று ராமநாதபுரத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி அரசியலை தாண்டி ஓபிஎஸ் மீது தனிப்பட்ட அன்பு வைத்திருக்கிறார். அதன்பேரில் ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் முன்பு நான் ஒரு சிறுபிள்ளை. தமிழ்நாட்டில் நடந்த அரசியல் துரோகங்களில் ஓபிஎஸ்சிற்கு, எடப்பாடி பழனிசாமி செய்தது மிகப்பெரிய துரோகம். ஓபிஎஸ்சுக்கு விளைவிக்கப்பட்ட அநீதிக்கு ராமநாதபுரம் தொகுதி மக்கள் நீதி வழங்குவார்கள். வரும் ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவிற்கு பிறகு ஓபிஎஸ்சின் விஸ்வரூபம் தெரியும். அதன் பிறகு அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள். தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், தேர்தலில் தனது தந்தை தான் நிற்க வேண்டும் என்ற பெருந்தன்மையோடு தேர்தலில் இருந்து விலகிக்கொண்டார். ஓபிஎஸ் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களில் முதன்மையானவராக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘தேர்தலுக்கு பின் அதிமுக இருக்காது காண்டிராக்டர்களுக்கு கட்சி நடத்தும் எடப்பாடி’
அண்ணாமலை கூறுகையில், எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, அதிமுக காண்டிராக்டர்கள் நடத்தக்கூடிய கட்சி. இவர் காண்டிராக்டர்களுக்காக தாரை வார்த்திருக்கிறார். இன்றைக்கு அவர் போட்டிருக்கிற வேட்பாளர்களை பாருங்கள், காண்டிராக்டர் மகனுக்கு சீட்டு, மணல் கடத்துறீங்களா உங்கள் தம்பி பையனுக்கு சீட்டு, இதற்கு முன்னாடி மெடிக்கல் காலேஜ் காண்டிராக்ட் எடுத்து கட்டினீங்களா உங்களுக்கு சீட்டு, இதனை உண்மையான அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதனால்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். 2024ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது என்றார்.

The post அண்ணாமலையின் இங்க ஒரு வாய்… அங்க ஒரு வாய்… ‘ஜூன் 4க்கு பின் டிடிவி கைக்கு அதிமுக வரும்’ appeared first on Dinakaran.

Tags : Annamalai ,AIADMK ,DTV ,BJP ,president ,AAMK ,Dinakaran ,Theni ,AMU ,Oru ,
× RELATED தேனி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்..!!