×

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 138 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள்:  எல்சிடி திரை மூலம் இயக்கம்  மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை, ஏப்.13: சென்னையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், 138 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள், எல்சிடி திரைகள் மூலம் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல், சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது.

இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன. இதில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன. இதில் 3 நிலையங்கள் மிக தாழ்வாக அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஓட்டுநர் இல்லா ரயில்களின் 2025ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இயக்கப்பட உள்ளது. 3 பெட்டிகள் கொண்ட 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் மாதவரம் முதல் சிப்காட் (காரிடார் 3), லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (காரிடார் 4) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (காரிடார் 5) காரிடர்களுக்கு இந்த ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்கள் வாங்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஜிபிஎஸ், சிக்னல் ரீடிங், டைமிங் சீகுவென்ஸ் ஆகிய பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்து இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு ஒரு வருடத்திற்கு விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் இந்த ரயில்கள் தயார் செய்யப்பட்டு அதன்பின் சோதனை முயற்சிகள் அனைத்தும் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே இயக்கப்படும் ஓட்டுனர் இல்லாத 26 ரயில்களின் முதல் பேட்ச் அடுத்த ஆண்டு மத்தியில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ரயில்கள் இத்தனை வசதிகளா என்று கூறும் அளவுக்கு இந்த ரயில்களில் பல்வேறு வசதிகள் உள்ளன. அதில் மிகப்பெரிய எல்சிடி திரையில் வர இருக்கும் நிறுத்தங்கள், நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் போன்ற தகவல்கள் இடம்பெறும். மேலும் அந்த இடத்தின் சிறப்புகளும், அதில் திரையிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பயணிகளின் வசதிக்காக மொபைல் சார்ஜ் போடும் ஸ்பாட்களும் ரயில்களில் இடம்பெற்றுள்ளது. இது தவிர பல்வேறு வசதிகள் இந்த ரயிலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரயிலில் பயணித்தால் நிச்சயம் மிகவும் வித்தியாசமான அனுபவத்தை தர முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளதாவது: 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 பெட்டிகள் கொண்ட 138 ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் 3 வழித்தடங்களுக்கு மூன்று ஒப்பந்தங்களின் வாங்கப்படுகிறது. தானியங்கி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஜிபிஎஸ், சிக்னல் ரீடிங், டைமிங் சீகுவென்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்து இந்த மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் இந்த மெட்ரோவில் எல்சிடி திரைகள் வைக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் பொது பயன்பாட்டிற்கு அனுப்புவதற்கு முன்பு ஒரு வருடத்திற்கு விரிவான சோதனைக்குட்டப்படுத்தப்படும். இந்த ரயில்களுக்கான வடிவம் தற்போது செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஒரு மாதத்தில் இந்த ரயில்கள் தயார் செய்யப்பட்டு அதன்பின் சோதனை முயற்சிகள் செய்யப்படும். பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே இயக்கப்படும் டிரைவர் இல்லாத 26 ரயில்களின் முதல் பேட்ச் அடுத்த ஆண்டு வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 138 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள்:  எல்சிடி திரை மூலம் இயக்கம்  மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai metro administration ,Dinakaran ,
× RELATED மெட்ரோ பயணிகளுக்கு இனி ஸ்மார்ட் கார்டு கிடையாது