×

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான கவிதாவின் சிபிஐ காவல் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான கவிதாவின் சிபிஐ காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதில் தொடர்புடையதாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 15-ந்தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா அனுமதி வழங்கியிருந்தார்.

இதன்படி கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இதனையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கவிதா இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரித்து வருவதால் அவர்களும் கடந்த 6-ந் தேதி டெல்லி திகார் ஜெயிலில் இருக்கும் கவிதாவை சிறையிலேயே விசாரணை நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு பெண் போலீஸ் மற்றும் கவிதாவின் வழக்கறிஞர் முன்னிலையில் டெல்லி திகார் சிறையில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என சிபிஐ தெரிவித்தது. டெல்லி நீதிமன்றத்தில் கவிதா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், கவிதாவின் சிபிஐ காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான கவிதாவின் சிபிஐ காவல் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : CBI ,Kavita ,Delhi ,Former ,Chief Minister ,Telangana ,Chandrasekha ,Delhi government ,CPI ,Dinakaran ,
× RELATED கவிதா ஜாமின் வழக்கு: டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணை