அரியலூர்: சிறுத்தை நடமாட்டத்தால் ஏற்பட்ட அச்சம் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் சிசிடிவியில் பதிவான சிறுத்தை கடந்த 10 நாளாக தேடப்படுகிறது. அரியலூர் மாவட்டம் செந்துறையில் நேற்று சிறுத்தை ஒன்று சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இரு இடங்களில் பதிவான சிறுத்தையும் ஒன்றுதானா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மயிலாடுதுறையில் திரிந்த சிறுத்தை 70 கி.மீ. பயணித்து செந்துறை வந்ததா என்பது இதுவரை உறுதியாகவில்லை. சிறுத்தை ஒன்றுதான் என உறுதியாகும் வரை மயிலாடுதுறையில் தேடுவதை நிறுத்த வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தையை கண்டுபிடிக்க 22 இடங்களில் கேமரா பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. செந்துறை, பொன்பரப்பு, சிதளவாடி, உஞ்சினி ஆகிய கிராமங்களில் முந்திரி காடுகளில் கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. சிறுத்தையை பிடிப்பதற்காக மயிலாடுதுறையில் இருந்து கூண்டுகளும் வரவழைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக 63852 85485 என்ற வாட்ஸ் அப் எண்ணில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவித்துள்ளார். சிறுத்தை நடமாட்டத்தையடுத்து அரியலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அரியலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மதியம் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்!: அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்..!! appeared first on Dinakaran.