×

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் உடமைகளை சோதனையிட தானியங்கி இயந்திர வசதி அறிமுகம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் டெர்மினல் ஒன்றில் இருந்து புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் தற்போது பாஸ்ட் டிராக் எனப்படும் self package drop (SBD) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் மூலம் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகள், தங்களுடைய உடமைகளை தாங்களே தானியங்கி இயந்திரங்கள் மூலம் ஸ்கேன் செய்து கன்வேயர் பெல்ட் மூலம் விமானத்திற்கு ஏற்றுவதற்கு அனுப்பி வைக்கலாம்.

இதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், புறப்பாடு பகுதி டெர்மினல் ஒன்றில் பாதுகாப்பு சோதனை கவுன்டர்கள் 60 முதல் 63 வரையில் தானியங்கி சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கவுன்டர்களில் ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், இயந்திரங்கள் மட்டும் இருக்கும். பயணிகள் அந்த இயந்திரத்தில் தங்களுடைய உடமைகளை வைத்துவிட்டு, தங்களின் பயண டிக்கெட், பிஎன்ஆர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். உடனடியாக தானியங்கி முறையில் அவர்களுக்கு போர்டிங் பாஸ் வரும்.

பயணிகள் அந்த போர்டிங் பாஸை எடுத்து, அங்குள்ள மற்றொரு இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும். உடனடியாக அந்த உடமைகளில், பாதுகாப்பு காரணங்களுக்காக என்னென்ன பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விவரங்கள், அந்த இயந்திரத்தின் டிஸ்ப்ளேவில் தெரியும். அதை பார்த்துவிட்டு, பயணிகள் அந்த இயந்திரத்தில் உள்ள பட்டன்கள் மூலம் ஓகே கொடுக்க வேண்டும். அதோடு தான் எடுத்துச் செல்லும் உடமைகளின் எண்ணிக்கை குறித்தும் பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து பயணிகள் உடமைகளில் ஒட்டுவதற்கான டேக்குகள், இயந்திரத்தில் இருந்து வரும். பயணி அந்த டேக்குகளை எடுத்து தங்கள் உடமைகளில் ஒட்டுவதோடு, அதன்பின்பு உடமைகளை அருகே உள்ள கன்வேயர் பெல்டில் வைத்துவிட்டால், உடமைகள் விமானத்தில் ஏற்றுவதற்கு தானாகவே கொண்டு செல்லப்படும்.

இந்த புதிய முறை மூலம், பயணிகள் போர்டிங் பாஸ் வாங்குவது மற்றும் தங்கள் உடமைகளை பாதுகாப்பு சோதனை நடத்தி விமானத்தில் ஏற்றுவதற்கு அனுப்பி வைப்பது போன்றவைகளுக்காக நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அதி சீக்கிரத்தில் அப்பணிகளை முடித்துவிட்டு, பயணிகள் விமானங்களில் ஏறுவதற்கு தயாராகி விடலாம். இதனால் இந்த புதிய திட்டத்திற்கு பாஸ்ட் டிராக், எஸ்பிடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது முதல்கட்டமாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், டெர்மினல் ஒன்றில் இருந்து புறப்படக்கூடிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களின் பயணிகளுக்கு மட்டும் இந்த புதிய செல்ப் பேக்கேஜ் டிராப் (எஸ்பிடி) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

படிப்படியாக மற்ற விமான நிறுவன பயணிகளுக்கும், உள்நாட்டு முனையம் டெர்மினல் 4ல் இருந்து புறப்படும் விமான பயணிகளுக்கும் இந்த முறை செயல்பாட்டுக்கு வர இருக்கிறது என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் பயணிகள் உடமைகளை சோதனையிட தானியங்கி இயந்திர வசதி அறிமுகம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,CHENNAI ,Indigo Airlines ,Terminal 1 ,Chennai Domestic Airport ,
× RELATED மீனம்பாக்கம் விமான நிலையத்தில்...