×

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன. மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை விரட்டியுள்ளனர். தொடர்ந்து படகுகளை விரட்டி வந்த இலங்கை கடற்படையினர், ரோந்து கப்பலை வைத்து மீன்பிடி படகுகளில் மோதி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த கிங்ஸ்டன் என்பவரின் படகின் பின் பகுதி சேதமடைந்தது. பின்னர் படகில் ஏறிய இலங்கை கடற்படையினர், தண்ணீர் குழாய்கள் மற்றும் இரும்பு பைப்களை வைத்து மீனவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கிவலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர். படகை சிறைபிடித்து செல்ல முயன்ற இலங்கை கடற்படையினரிடம், படகில் இருந்த மீனவர்கள் கெஞ்சி முறையிட்டு பின்னர் தப்பித்தனர்.

இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் மெக்கான்ஸ், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் தங்கம், நம்பிராஜன் ஆகியோருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த மீனவர்கள் இருவரும் கரைக்கு வந்து பின் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றனர். இலங்கை கடற்படையின் இந்த கொடூர தாக்குதல் நடவடிக்கை ராமேஸ்வரம் மீனவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மீனவர்களிடையே புலனாய்வுபிரிவு மற்றும் மரைன் போலீசார் விசாரணை நடத்தினர்.

The post இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Rameswaram ,Sri Lanka ,Sri Lankan Navy ,
× RELATED இலங்கைக்கு கடலில் நீந்த முயன்ற கர்நாடக வீரர் சாவு