×

5990 பணியிடங்களுக்கான குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..!!

சென்னை: தமிழ்நாடு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 151 குரூப்-2 மற்றும் 2 ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதில், 161 இடங்கள் நேர்முகத் தேர்வைக் கொண்ட பணியிடங்களாகவும், 5 ஆயிரத்து 990 காலி இடங்கள் நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களாகவும் பிரிக்கப்பட்டன. இந்த பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு 2022ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சம் பேர் எழுதினர். முதல் நிலை தேர்வில் 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி அடைந்த நிலையில் இவர்களில் 55,071 பேர் முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி நடைபெற்றது. குரூப்-2 நேர்முகத் தேர்வு கொண்ட பணியிடங்களுக்கான முடிவுகள் மட்டும் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

இந்நிலையில், 5 ஆயிரத்து 990 பணியிடங்கள் கொண்ட நேர்காணல் அல்லாத குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஒரு பணியிடத்திற்கு இரண்டரை பேர் வீதம், சுமார் 14 ஆயிரத்து 500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான குரூப்-1 தேர்வு முடிவுகளின் தரவரிசைப்பட்டியலும் வெளியாகி உள்ளது. 198 பேர் கொண்ட இப்பட்டியலில், 850 மதிப்பெண்களுக்கு 587 புள்ளி 25 மதிப்பெண்கள் பெற்ற பெண் ஒருவர் முதலிடத்தை பிடித்துள்ளார். குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 198 பேருக்கும், வரும் 12ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post 5990 பணியிடங்களுக்கான குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..!! appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,Tamil Nadu Ministries ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு