×

திருப்பத்தூரில் விபரீதம் ஓடும் பஸ்சில் ஏறியபோது சக்கரத்தில் சிக்கிய வாலிபர்

*பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

திருப்பத்தூர் : திருப்பத்தூரில் அரசு பஸ்சில் ஏற முயன்ற வாலிபர் தவறி கீழே விழுந்ததில் பஸ் சக்கரத்தில் சிக்கினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வரதாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் ஆறுமுகம்(36). பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். இவரது பெரியப்பா அண்ணாமலை என்பவர் திருப்பத்தூர் அடுத்த சித்தேரி பகுதியில் இறந்துவிட்டார். எனவே, இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஆறுமுகம் பெங்களூருவில் இருந்து திருப்பத்தூருக்கு நேற்று முன்தினம் வந்தார்.

தொடர்ந்து, அண்ணா நகர் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தபோது அரசு பஸ் ஒன்று வந்தது. டிரைவர் ஞானசேகரன் என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். பின்னர், அங்கு பஸ் நின்று புறப்பட்டபோது வாலிபர் ஆறுமுகம் பஸ்சில் ஏறினார். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக்கொண்டார்.

இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் பதறியடித்தபடி ஓடிவந்து படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை மீட்டனர். பின்னர், அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆறுமுகத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், வாலிபர் ஆறுமுகம் பஸ்சில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கி கொண்ட சம்பவம் தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருப்பத்தூரில் விபரீதம் ஓடும் பஸ்சில் ஏறியபோது சக்கரத்தில் சிக்கிய வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Tiruppathur ,Vellore district ,Varadapalayam ,Kudiatham ,Tirupathur ,
× RELATED திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது