×

தெலுங்கு, கன்னட மக்களுக்கு அன்புமணி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் யுகாதி வாழ்த்து!!

சென்னை: யுகாதி திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு அன்புமணி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: “தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசுகிற, மொழி சிறுபான்மையினர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து தமிழை வாழ்வியல் மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக மொழி சிறுபான்மையினர் மீது வெறுப்பை வளர்க்கிற வகையில் சிலர் செயல்பட்டு வருவது மிகுந்த வேதனையைத் தருகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட்டாலும், மொழி சிறுபான்மையினர் எவ்வித பேதமுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். யுகாதி திருநாளில் ஜாதி, மத, துவேஷம் கலைந்து மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், இன்று யுகாதி பண்டிகை கொண்டாடும் மொழி சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பும், முக்கியத்துவமும் வழங்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: “இந்தப் புத்தாண்டு, தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாகவும், நமக்குரிய முறையில் வரிப்பகிர்வைப் பெறும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் அமையட்டும். தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டான யுகாதி திருநாளைக் கொண்டாடும் அந்த மொழிகளைப் பேசும் சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘முப்பது கோடி முகமுடையாள் – உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் – இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்’’ என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப தெலுங்கு பேசும் மக்களும், கன்னட மொழி பேசும் மக்களும் தமிழர்களிடமிருந்து மொழியால் வேறுபட்டு இருந்தாலும் சிந்தனையால் ஒன்றுபட்டவர்கள்; உடலால் வேறுபட்டாலும் உயிரால் ஒன்றுபட்டவர்கள். இதற்கு வாழும் எடுத்துக்காட்டு தமிழ்நாடு தான். தமிழ்நாடு மாநிலம் தான் மொழியாலும், பிற வகைப்பாடுகளாலும் வேறுபட்டவர்களை ஒன்றாக்கி ஒற்றுமையாக வாழச் செய்யும் மாநிலம் ஆகும்.

யுகாதி நாளில் தான் உலகம் பிறந்ததாக தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் உலகத்தை உருவாக்கிய யுகாதி நாள், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் தேவையான அனைத்து நலன்களையும், வளங்களையும் வழங்க வேண்டும். அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, சகோதரத்துவம், இன்பம், வளமை, நிம்மதி உள்ளிட்ட அனைத்தும் நிறைய வேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

The post தெலுங்கு, கன்னட மக்களுக்கு அன்புமணி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் யுகாதி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Selvaperunthagai ,CHENNAI ,Selvaperunthakai ,Tamil Nadu ,Yugadi Thirunal ,Tamil Nadu Congress Committee ,President ,Yugadi ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...