×

பாஜவுடன் கூட்டணி வைப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

சென்னை: தேசிய கட்சியான பாஜவோடு கூட்டணி வைப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என அதிமுக ெபாது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வாக்கு சேகரிக்க திருவள்ளூருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார்.

அவரை முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, பா.பென்ஜமின், மாதவரம் வி.மூர்த்தி, எஸ்.அப்துல் ரஹீம், முன்னாள் எம்பி க்கள் டாக்டர் பி.வேணுகோபால், திருத்தணி கோ.அரி, மாவட்ட செயலாளர்கள் சிறுணியம் பி.பலராமன், வி.அலெக்சாண்டர், தேமுதிக மாவட்ட செயலாளர் திருத்தணி டி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியே பாஜ கூட்டணியில் இருந்து விலகினோம். சுயநலத்தோடு யோசித்திருந்தால் கூட்டணியில் தொடர்ந்திருப்போம். அதிமுக கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு அடி பணியாத கட்சி. தேசிய கட்சியான பாஜவோடு கூட்டணி வைத்து எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழ்நாடு வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக அதிமுக தேசிய கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை.

அதிமுக ஆட்சிக்காலத்தில் வல்லரசு நாடுகளில் கூட பார்க்க முடியாத அளவிற்கு திருவள்ளுரில் பிரமாண்டமான மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்பட 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு மேம்பாலங்கள், தடுப்பணைகள் கொண்டு வந்தோம்.இவ்வாறு அவர் பேசினார். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் சதுக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து நேற்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

‘‘இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பு கிடையாது. இக் கூட்டணிக்கு பிரதமர் யார் என்பதை இதுவரை கூற முடியவில்லை. எங்களுக்கு தேவையான திட்டங்களை லோக்சபாவில் குரல் கொடுத்து, ஒன்றிய அரசிடமிருந்து பெறுவோம். இன்று சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கின்றனர். அவ்வாறு பாதிக்கின்ற மக்களுக்காக சுயமாக, சுதந்திரமாக குரல் கொடுக்க நாங்கள் பா.ஜ.வில் இருந்து வெளியேறினோம். பிரதமரை முன்னிறுத்திதான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாநில பிரச்னைகளை முன்னிறுத்தி மாநில உரிமைகளை மீட்டெடுக்க அதிமுக வேட்பாளர்கள் முயல்வார்கள்’’ என்றார்.

The post பாஜவுடன் கூட்டணி வைப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை: எடப்பாடி பழனிசாமி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Edappadi Palaniswami ,CHENNAI ,AIADMK ,general secretary ,K. Nalladhampi ,Tiruvallur ,DMDK ,
× RELATED வெற்றியை இலக்காக கொண்டு தேர்தல்...