×

தமிழ், தமிழ்நாடு, தமிழ்மக்கள் மீது பாசம் பொங்குவது போல் பாசாங்கு செய்யும் மோடிக்கு மக்கள் தோல்வியை பரிசளிப்பார்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை: திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் முனைவர் தமிழச்சி் தங்கப்பாண்டியன போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வேளச்சேரி எம்ஜிஆர் நகரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது: பாஜ, அதிமுக டெபாசிட் வாங்கினால் கூட அது அவர்களுக்கு வெற்றியாகிவிடும். அதற்கும் மக்கள் வாய்ப்பளிக்க கூடாது. புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மூடி, ஏழை எளிய மக்களுக்கு கிடைத்து வந்த இலவச அரிசியை நிறுத்தியவர்தான் தமிழிசை. அவருக்கு மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? தமிழச்சி தங்கபாண்டியன் 5 லட்சத்திற்கும் கூடுதலான வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார். ஒன்றிய அரசின் கொள்கைதான் விலைவாசி உயர்வுக்கு காரணம். பால், காபி பவுடர், சர்க்கரை ஆகியவற்றிற்கு தனித்தனியாக ஜிஎஸ்டி போடுகிறார்கள்.

இவற்றை ஒன்றாக கலந்த காபிக்கும் ஜிஎஸ்டி. பருத்தி, அதிலிருந்து வரும் நூல், நெய்த துணி என ஒவ்வொரு நிலையிலும் ஜிஎஸ்டி விதிக்கிறார்கள். இதனால் விலைவாசி கடுமையாக உயர்கிறது. கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் போடுவேன் என்று மோடி சொன்னதை நம்பி மக்கள் வங்கி கணக்குகளை தொடங்கினர். அதை சாதனையாக சொல்கிறார். ரூ.480 ரூபாய் சிலிண்டர் ரூ.1000 என விலை உயர ஒன்றிய அரசின் வரிகள்தான் காரணம்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை பீப்பாய் 140 டாலராக இருந்தபோது, பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவாக இருந்தது.

பீப்பாய் 70 டாலராக குறைந்த நிலையில், பெட்ரோலிய பொருட்களின் விலை இருமடங்கு அதிகமாக விற்கப்படுகிறது. இப்படி எளிய மக்களிடம் இருந்து வரி வசூல் என்கிற பெயரில் பாஜ அரசு ரூ.28 லட்சம் கோடி ரூபாயை கொள்ளை அடித்துள்ளது. தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என்பதால் தற்போது கேஸ் விலையை குறைத்துள்ளனர். சென்னை தத்தளித்தபோது வராத பிரதமர், நிவாரணம் தராத பிரதமர், தமிழ், தமிழ்நாடு, தமிழ்மக்கள் மீது பாசம் பொங்குவதாக பாசங்கு செய்கிறார். அவருக்கு மக்கள் தோல்வியை பரிசளிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழ், தமிழ்நாடு, தமிழ்மக்கள் மீது பாசம் பொங்குவது போல் பாசாங்கு செய்யும் மோடிக்கு மக்கள் தோல்வியை பரிசளிப்பார்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Modi ,Marxist ,K. Balakrishnan ,Chennai ,DMK ,Dr. ,Tamilachi Thangapandiyana ,South Chennai ,India Alliance ,Velachery MGR Nagar ,Marxist Communist Party ,Communist ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...