×

குடும்ப பிரச்னையில் மனைவி அளித்த புகாரில் தரக்குறைவாக பேசிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்பியிடம் கணவர் புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கத்தை சேர்ந்த கமலக்கண்ணன், என்பவர் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகத்திடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: இந்து ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த நான், கலப்பு திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட பணப்பிரச்னை காரணமாக, கடன் வாங்கி அதனை கட்ட கஷ்டப்பட்டதால் மனைவிக்கும், எனக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 30ம்தேதி மனைவிக்கும், எனக்கும் இடையே மீண்டும் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதனால், சாலவாக்கம் காவல் நிலையத்தில் என் மீது, எனது மனைவி புகார் அளித்தார். அதன்பேரில், விசாரணைக்கு அழைத்தார்கள். அதன்படி, சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்றபோது, முறையாக மகளிர் காவல் நிலையம் விசாரணைக்கு அனுப்பாமல், அங்கு பணியிலிருந்த எல்லப்பன், ரைட்டர், பாஸ்கர் ஆகிய காவலர்கள், என்னை இரும்பு லத்தியால் தாக்கி, என்னிடம் எந்தவொரு விசாரணை செய்யாமல், என் தரப்பு நியாயத்தை கேட்காமல் ஒருதலைபட்சமாக என் சாதியை பற்றி தரக்குறைவாக பேசி, என்னை தற்கொலைக்கு தூண்டும் வகையில் எனக்கு மன உளச்சலை ஏற்படுத்தி, என் தாயையும் கேவலமாக பேசினார்கள்.

மேலும் காவலர்கள், என்னை தாக்கியதால் உள்காயமடைந்து உடல் முழுவதும் வலி ஏற்பட்டது. மேற்படி, நிகழ்வானது என் மனைவி மகள் மற்றும் என் மாமியார் ஆகியோரின் முன்னிலையில் நடந்ததால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளனேன். மேலும், உடல்வலி தீருவதற்காக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் படூர் சென்று சிகிச்சை பெற்று வலி நிவாரணி மாத்திரை உண்டு வருகிறேன். எனவே, குடும்ப பிரச்னையில் என் சாதியை பற்றி தரக்குறைவாக பேசியும், என்னை கடுமையாக தாக்கிய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post குடும்ப பிரச்னையில் மனைவி அளித்த புகாரில் தரக்குறைவாக பேசிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்பியிடம் கணவர் புகார் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kamalakannan ,Salavakkat, Kanchipuram district ,Kanchipuram district ,SP Shanmugam ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...