×

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்கள்: மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு

சென்னை: காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்கள் இடம்பெற்றுள்ளது, என மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தெரிவித்தார். மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வில்லிவாக்கம் மேற்கு பகுதியில் நேற்று வீதி வாரியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் பகுதி செயலாளர் கூ.பி.ஜெயின் ஆகியோர் பிரசாரத்தில் பங்கேற்றனர். பின்னர், சிட்கோ நகர், பாரதி நகர், புதிய ஆவடி சாலை, திருநகர், அகத்தியர் நகர், குமாரசாமி நகர், பாடி மேம்பாலம், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அவருக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் நிருபர்களிடம் கூறியதாவது: வில்லிவாக்கம் மக்கள் எப்போதும் அன்பாக இருப்பார்கள். கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது. நாம் என்ன நினைத்தோமோ அதே எண்ணத்துடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. பாஜ அரசு கொண்டு வந்துள்ள அனைத்து தவறான திட்டங்களை எதிர்த்துள்ளனர். அதை முழுமையாக வரவேற்கிறோம். நீட் விலக்கு கேட்டோம், அதை கொண்டு வந்திருக்கிறார்கள். இது, காங்கிரஸ், திமுக ஒற்றுமையாக செயல்படுவதை தான் காட்டுகிறது. ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் போது அனைத்தும் நிறைவேற்றப்படும். பாஜ வேட்பாளர் ஏற்கனவே தோல்வியை சந்தித்துள்ளார். மீண்டும் தோல்வியை சந்திக்க இருக்கிறார். ெவந்த புண்ணில் வேல் பாய்ச்ச விரும்பவில்லை. வந்து ஒன்றும் பயனில்லை என்று தான் அமித்ஷா வரவில்லை. பிரதமர் மோடி வரணும், எங்கள் கூட்டணிக்கு பிரதான பிரசாரம் செய்பவர் யார் என்றால் பிரதமர் மோடி தான்.

அவர் வந்தால் எங்கள் மதிப்பு கூடிக் கொண்டு போகும். வெள்ள பாதிப்பின் போது வரவில்லை. நல்லது கெட்டத்துக்கு வரவில்லை. ஓட்டுக் கேட்க மட்டும் வருகிறீர்களே என்று பொதுமக்கள் கேட்பாங்கள். நானே கேட்கிறேன், தூத்துக்குடி போனாரே மக்களை பார்த்தாரா, சென்னை வந்த போது மக்களை பார்த்தாரா. மத்திய சென்னையில் மக்கள் உற்சாகமாக இருக்கிறார்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார். சொல்லாததையும் நிறைவேற்றுவார். காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. கண்டிப்பாக இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், பாக முகவர்கள், பிஎல்சி உறுப்பினர்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்கள்: மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Congress Party ,Madhya Pradesh ,Dayanidhi Maran ,CHENNAI ,Dayanithi Maran ,DMK ,Central Chennai ,Central Chennai Constituency ,Villivakkam West ,
× RELATED 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால்...