புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் தேர்தல் அதிகாரி அனில் மாஷி நேற்று உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான யூனியன் பிரதேசம் சண்டிகரின் மேயர் தேர்தல் சண்டிகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான எட்டு வாக்குகளை தேர்தல் அதிகாரியான அனில் மாஷி வேண்டுமென்றே சிதைத்து அதனை செல்லாது என்று அறிவித்தார். இந்த விவகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘சண்டிகர் மேயர் பதவி விவகாரத்தில் முன்னதாக வெளியிடப்பட்ட தேர்தல் முடிவை ரத்து செய்ததோடு, ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” என்று கடந்த பிப்ரவரி 21ம் தேதி உத்தரவிட்டது.
மேலும் இந்த விவகாரத்தில் தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மாஷி மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பி இருந்தது. மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘‘சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் தனது செயல்பாடுகளுக்காக அதிகாரி அனில் மாஷி தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.
The post சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட தேர்தல் அதிகாரி appeared first on Dinakaran.