×

ஏற்கனவே உள்ள மின் கம்பத்திலிருந்து இணைப்பு எடுக்கப்பட்டால் மேல்நிலை அமைப்புக்கான மேம்பாட்டு கட்டணம் மட்டுமே பெற வேண்டும்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்

 

சென்னை: நுகர்வோரின் சேவை இணைப்பு ஏற்கனவே உள்ள மின் கம்பத்திலிருந்து எடுக்கப்பட்டு நிலத்தடியில் வைத்திருந்தால், மேல்நிலை அமைப்புக்கான மேம்பாட்டு கட்டணம் மட்டுமே பெற வேண்டும் என மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நிலத்தடி கேபிளுக்கு பொருந்தும் மேம்பாட்டுக் கட்டணங்கள், மேல்நிலைப் பிரிவின் விண்ணப்பதாரர்களிடமிருந்தும் வசூலிக்கப்படுதாகவும், எந்த ஒரு சோதனையும் செய்யாமல் நிலத்தடி மற்றும் மேல்நிலை வகைகளில் என அனைத்து வகை விண்ணப்பதாரர்களிடமிருந்தும் நிலத்தடி கேபிள்களுக்கான அதிக மேம்பாட்டு கட்டணங்களை தானாகவே சேகரிக்கும் வகையில் மின் வாரிய கணினி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது என்று பலர் கூறி வந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தாமாக முன் வந்து விசாரித்து ஆணை பிறபித்தது. இந்த ஆணையில், அதிக கட்டணம் வசூலிப்பது உடனடியாக நிறுத்தப்படும். டிடியில் இருந்து விண்ணப்பதாரர்களின் வளாகம் வரை குறைந்த அழுத்த மின் நீட்டிப்பு பணிகள் நிலத்தடி கேபிள்களுடன் தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே, நிலத்தடி கேபிள்களின் கீழ் மேம்பாட்டு கட்டணம் செலுத்தப்படும். நிலத்தடி கேபிள்கள் மூலம் குறைந்த மின் அழுத்த அமைப்புகள் பெரும்பாலும் சென்னை பகுதியில் மட்டுமே சேவையில் உள்ளன.

சேலம், ஈரோடு, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் நிலத்தடி கேபிள்கள் மூலம் அதிக மின் அழுத்த ஃபீடர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அந்த ஃபீடர்களின் குறைந்த அழுத்த கொண்ட நெட்வொர்க்கின் பெரும்பகுதி இன்னும் மேல்நிலை அமைப்புகளில் மட்டுமே உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் மேல்நிலை மேம்பாட்டுக் கட்டணங்கள் மட்டுமே பொருந்தும். குறைந்த அழுத்த கேபிள்கள் மேல்நிலையில் இருந்து, நுகர்வோரின் சேவை இணைப்பு அருகில் ஏற்கனவே உள்ள மின் கம்பத்திலிருந்து எடுக்கப்பட்டு நிலத்தடியில் வைத்திருந்தாலும், மேல்நிலை அமைப்புக்கான மேம்பாட்டு கட்டணங்கள் மட்டுமே பொருந்தும்.

நிலத்தடி கேபிள் அமைப்பின் தூண் பெட்டியில் இருந்து சர்வீஸ் கேபிள் மூலமாக மின் இணைப்பு பொருத்தி இருந்தால் மட்டுமே, நிலத்தடி மேம்பாட்டுக் கட்டணங்கள் பொருந்தும். பயன்பாட்டு மென்பொருளானது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்படும் என்றும், தற்போது உள்ள ஏற்பாடுகளுடன் மேலும் மேம்பாட்டு கட்டணங்களை வசூலிக்க அனுமதிக்கப்படாது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

The post ஏற்கனவே உள்ள மின் கம்பத்திலிருந்து இணைப்பு எடுக்கப்பட்டால் மேல்நிலை அமைப்புக்கான மேம்பாட்டு கட்டணம் மட்டுமே பெற வேண்டும்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Electricity Regulatory Authority ,CHENNAI ,Electricity Regulatory Commission ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED ஏற்கனவே உள்ள மின் கம்பத்திலிருந்து...