புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று அளித்த பேட்டி:
பிரதமர் மோடிக்கு செலக்டிவ் அம்னீஷியா இருப்பதாக தெரிகிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது, கச்சத்தீவு குறித்து வாய் திறக்காமல் தற்போது தேர்தலுக்காக வாய் திறந்துள்ளது அவருக்குள்ள நோய் உண்மை என்று காட்டுகிறது. அண்ணாமலை கூறுவது போன்று எங்களுடைய தலைவர் கலைஞர், கச்சத்தீவை அளிப்பதற்கு எந்த ஒப்புதலும் தரவில்லை. அவர் ஒரு ராஜதந்திரி. இந்த பிரச்னையை 2 ஆண்டுகள் ஒத்தி போட முடியுமா என்று தான் கலைஞர் கேட்டாரே தவிர ஒரு போதும் விட்டு கொடுப்பதற்கு சம்மதிக்கவில்லை.
கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னருக்கு தான் சொந்தம். அவருடைய வாரிசுகள் இதுவரை சொந்தம் கொண்டாடவில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் ராமநாதபுரம் மன்னர் வாரிசு வழக்கு தொடர்ந்து, கச்சத்தீவு எனக்கு தான் சொந்தம் என்று கூறுவதற்கு சட்டத்தில் இடம் உண்டு. இந்த பிரச்னை இருநாட்டு சம்பந்தப்பட்ட பிரச்னை. ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களையும், பாதிக்கப்பட்ட மீனவர் சமுதாயங்களையும் சந்தித்து பேசி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும், கச்சத்தீவை மீட்பதற்கும் விரைவில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். பிரதமர் மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சரும் கச்சத்தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு கூறினார்.
The post ராமநாதபுரம் மன்னர் குடும்பத்திடம் பேசி கச்சத்தீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.