×

மணலி அருகே தனி நபர்களால் புழல் ஏரி நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து லாரி ஷெட்கள்: மீட்டெடுக்க சமூக நலஆர்வலர்கள் கோரிக்கை

திருவொற்றியூர்: பூண்டி, புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் கால்வாய் வடபெரும்பாக்கம், ஆ.முல்லைவாயல், சடையங்குப்பம் பகுதி வழியாக முகத்துவார ஆற்றில் இணைந்து கடலில் கலந்துவிடுகிறது. இந்த நிலையில், மணலி மண்டலத்துக்கு உட்பட்ட ஆ.முல்லைவாயல் பகுதியில் இருந்து பர்மா நகர் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு உபரி நீர் வரக்கூடிய நீர்வழிபாதை கால்வாய் சீரமைக்கப்படாமல் புதர் மண்டிகிடக்கிறது. இதனால் பெரும் மழையின்போது பெருக்கெடுத்து வரும் உபரிநீர் சீராக போகமுடியாமல் சீரமைக்கப்படாத கால்வாயின் கரையின் வழியாக வெளியேறி குடியிருப்புகள் புகுந்து விடுகிறது.

இதன்காரணமாக ஒவ்வொரு வருடமும் கலைஞர் நகர், சிபிசிஎல் நகர், அப்போல்லோ ஆம்ஸ்ட்ராங் நகர், சின்னசாமி நகர், மணலி புதுநகர், எலந்தனூர், பர்மா நகர், அரியலூர், கொசப்பூர் மற்றும் சடையங்குப்பம் போன்ற பகுதிகள் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஆற்றுப்பாதையை சீரமைக்க வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது:
மணலி மண்டலத்துக்கு உட்பட்ட ஆ.முல்லைவாயில் முதல் சடையங்குப்பம் வரை உபரி நீர் கால்வாய் முழுவதும் மணல் திட்டுக்கள் அடைத்துள்ளது. இந்த நீர் வழிப்பாதையை தனியார் பல பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்துள்ளனர். மேலும் ஆக்கிரமிப்பு இடத்தில் லாரி ஷெட்டுகளை அமைத்து வாடகைக்கு விட்டுள்ளனர். அரசின் தரிசு நிலமாக உள்ள இந்த நீர் வழிப்பாதை நிலத்திற்கு வருவாய்த் துறையில் உள்ள சில அதிகாரிகள் துணைபோயுள்ளனர். மேலும் அதற்கு போலி ஆவணங்கள் தயாரித்து பட்டா பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு நீர்வழிப்பாதையில் ஆக்கிரகிமிப்புகள் தொடர்ந்தால் மணலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மழைநீர் புகுந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி உபரி நீர்வழிப் பாதையை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.

The post மணலி அருகே தனி நபர்களால் புழல் ஏரி நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து லாரி ஷெட்கள்: மீட்டெடுக்க சமூக நலஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Lorry ,Puzhal Lake ,Manali ,Poondi ,Mukathwara river ,Vadaperumbakkam, A. Mullaivayal ,Sadiankuppam ,A. Mullaivayal ,Manali Mandal ,Burma Nagar ,
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...