×

தயாநிதி மாறனை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் நாம் போடும் ஓட்டு தான் மோடிக்கு போடும் வேட்டு: மத்திய சென்னை பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். நாம் போடும் ஓட்டு தான் மோடிக்கு போடும் வேட்டாக இருக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் எம்பியை ஆதரித்து, திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை சென்னை எழும்பூர் டானா தெருவில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அங்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தயாநிதிமாறன் எம்பிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நம்முடைய வெற்றி வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வெற்றி சின்னம் உதய சூரியனுக்கு வாக்கு கேட்பதற்காக வந்தேன். ஆனால், இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது. என்னை விட ஆர்வத்துடன், எழுச்சியோடு அவரை வெற்றி பெற செய்வதிலே நீங்கள் இன்னும் அதிக முனைப்போடு இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் வாக்குப்பெட்டியில் தயாநிதி மாறன் பெயர் இரண்டாவது இடம். ஏப்ரல் 19ம் தேதி இரண்டாம் இடத்தில் இருப்பார். ஜூன் 4ம் தேதி முதல் இடத்துக்கு வரணும். நிச்சயமாக செய்வீங்களா?. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு நான் வந்து இருந்தேன். தயாநிதிமாறன் கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட 3 லட்சத்து 22 ஆயிரம் வாக்குள் வித்தியாசத்தில் மிக்பெரியவெற்றியை தேடி தந்தீர்கள். அதற்கு நான் பலமுறை நன்றி சொல்லியிருக்கிறேன்.

இந்த தொகுதிக்கு இந்த 3 ஆண்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை வந்து இருப்பேன். உங்களுக்கு தெரியும். கோவிட் காலமாக இருக்கட்டும். மழை வெள்ளமாக இருக்கட்டும். அனைத்து நேரங்களிலும் மக்களோடு மக்களாக நானும், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற, மக்கள் பிரதிநிதிகளும் அனைவரும் மக்களோடு, மக்களாக பயணித்து இருக்கிறோம். அனைத்து சுகம், துக்கங்களிலும் பங்கேற்று இருக்கிறோம். அந்த உரிமையோடு கேட்கிறேன்.

தயாநிதிமாறனை இந்த முறை எத்தனை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க போறீங்க. 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். யார் எதிர்த்து போட்டியிட்டாலும் டெபாசிட் வாங்க கூடாது. அந்த அளவுக்கு நமது தேர்தல் பணிகள், பிரசார பணிகள் இருக்க வேண்டும். பண்ணுவீங்களா. நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கிறேன். உறுதிமொழி கொடுக்கிறேன்.

தயாநிதிமாறனை நீங்கள் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்து விட்டீர்கள் என்றால், நான்- உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், அமைச்சர் அத்தனை பேரும் சேர்ந்து இந்த பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து போய் செய்து தரும் பணியில் நாங்கள் ஈடுபடுவோம்.

நான் வாக்குறுதி கொடுத்தால் காப்பாத்துவேன். நான் கலைஞர் பேரன். சொன்னால் சொன்னதை செய்வேன். உங்கள் வேட்பாளரும் கலைஞரின் பேரன் தான். கலைஞரின் பேரனுக்கு, கலைஞரின் பேரன் ஓட்டுக்கேட்டு வந்து இருக்கிறேன். தாய்மார்கள் முடிவு எடுத்து விட்டால் யாராலேயும் மாற்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், வெற்றியழகன், முன்னாள் எம்எல்ஏக்கள் வில்லிவாக்கம் ரங்கநாதன், கே.எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தயாநிதிமாறனை ஆதரித்து நுங்கம்பாக்கம் சுதந்திர தின பூங்கா அருகில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

The post தயாநிதி மாறனை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் நாம் போடும் ஓட்டு தான் மோடிக்கு போடும் வேட்டு: மத்திய சென்னை பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dayanidhi Maran ,Modi ,Udhayanidhi Stalin ,Madhya ,Pradesh ,CHENNAI ,DMK ,Madhya Chennai ,Udayanidhi Stalin ,
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...