×

விவசாய நிலங்களில் புகுந்த 3 யானைகள் விரட்டியடிப்பு பேரணாம்பட்டு அருகே நள்ளிரவில்

பேரணாம்பட்டு, ஏப். 3: பேரணாம்பட்டு அருகே நள்ளிரவில் விவசாய நிலங்களில் புகுந்த 3 யானைகள் விரட்டியடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள குண்டலபல்லி, ரங்கம்பேட்டை அரவட்லா, பாஸ்மர்பெண்டா உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி தண்ணீர் மற்றும் உணவு தேடி விவசாய நிலங்களில் புகுந்து விடுகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பேரணாம்பட்டு அடுத்த ரங்கம்பேட்டை முத்துகூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் 3 காட்டு யானைகள் புகுந்தது. தொடர்ந்து, அங்கிருந்த விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. அதனை கண்ட விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த வேலூர் மாவட்ட உதவி வன அலுவலர் மணிவண்ணன், பேரணாம்பட்டு வன அலுவலர் சதீஷ்குமார், வனவர் அண்ணாமலை உள்ளிட்டோர் விவசாயிகள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், டார்ச் லைட் அடித்தும் யானைகளை விடிய விடிய வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். மேலும், யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட உதவி வன அலுவலரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அவர், குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் யானையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு இந்த ஆண்டு ₹40 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளோம். மேலும் காட்டு விலங்குகள் கிராமத்திற்குள் வராதவாறு கழிகள், பென்சிங் மற்றும் தடுப்பு சுவர்கள் அமைத்து கொடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம்’ என்றார்.

The post விவசாய நிலங்களில் புகுந்த 3 யானைகள் விரட்டியடிப்பு பேரணாம்பட்டு அருகே நள்ளிரவில் appeared first on Dinakaran.

Tags : Peranamptu ,Peranampatu ,Kundalapally ,Rangampet Aravatla ,Pasmarpenta ,Vellore district ,
× RELATED சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார்