×

சீனா, இலங்கையை எதிர்க்க துணிச்சல் இல்லை கச்சத்தீவை பற்றி மோடி பேசலாமா? நாடகம் போடுவது இன்னும் சில நாட்களுக்குத்தான், வேலூர் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் பிரதமர் மோடி கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா? நீங்கள் போடும் நாடகம் எல்லாம் இன்னும் சிறிது நாட்களுக்குத்தான் என்பதை எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன், வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு, வாழ்நாள் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது உங்களது நீண்ட நாள் கோரிக்கை. மாநில அரசால், கல்வி நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும். இப்படி எண்ணற்ற சாதனைகளைச் சிறுபான்மையின மக்களுக்கு செய்து கொடுத்த – செய்து கொடுக்கும் – செய்யப் போகும் – அரசுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு. சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்று மோடியும் அமித்ஷாவும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச் சட்டம் 2019ல் மாநிலங்களவையில், அ.தி.மு.க.வும் – பா.ம.க.வும் ஆதரித்து ஓட்டு போட்டதால்தான், இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வந்திருக்கிறது. எவ்வளவு பெரிய துரோகத்தைச் சிறுபான்மையின மக்களுக்கு செய்துவிட்டு, இப்போது அந்தச் சட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்வது, பசப்பு நாடகம் இல்லையா? இன்றைக்குப் பிரதமராக இருக்கும் மோடி – மாநிலங்களை இல்லாமல் ஆக்க நினைக்கிறார். கூட்டாட்சி என்று சொல்வார். ஆனால், காட்டாட்சி நடத்த அத்தனை வேலையும் பார்ப்பார்.

அதனால்தான், அவரால் மக்களிடம் தன்னுடைய ஆட்சி சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. உடனே என்ன செய்கிறார். பழைய சம்பவங்களைப் பற்றி பொய்யான கதைகளைச் சொல்லி, அதுமூலமாக மக்களை குழப்பி, ஏமாற்றி, தேர்தல் ஆதாயம் அடைய முடியுமா என்று முயற்சி செய்கிறார். அதுதான் கச்சத்தீவு பிரச்னை. இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததைப் பற்றி இப்போது பா.ஜ. பேச ஆரம்பித்திருக்கிறது. ஆனால், இது அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. தேன்கூட்டில் கையை வைத்தது போல, இப்போது பா.ஜ. மாட்டிக் கொண்டு தவிக்கிறது.

2014ல் ஆட்சிக்கு வந்த பா.ஜ. உச்சநீதிமன்றத்தில் என்ன கூறியது? “கச்சத்தீவு மீண்டும் வேண்டும் என்றால் இலங்கை அரசுடன் போரில்தான் ஈடுபட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் கூறியது. இந்தப் பத்தாண்டு காலத்தில் பிரதமர் மோடி, எத்தனை முறை இலங்கைக்குப் பயணம் செய்தார். அப்போதெல்லாம் ஒருமுறையாவது கச்சத்தீவை மீண்டும் கேட்டிருக்கிறாரா? இலங்கை அதிபரைச் சந்தித்தபோதெல்லாம் கச்சத்தீவு இந்தியாவிற்குதான் சொந்தம் என்று சொல்லியிருக்கிறாரா? அப்போதெல்லாம் கச்சத்தீவு மோடியின் ஞாபகத்திற்கு வரவில்லை.

நேரு காலத்தில் நடந்தது – இந்திரா காலத்தில் நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கும் மோடிக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் இருக்கிறதா? மோடி அவர்களே… கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 26ம் நாள் சென்னைக்கு வந்து, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள். அந்த நிகழ்ச்சியில், ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையைத் தர வேண்டும். நீட் விலக்கு அளிக்க வேண்டும் என்று சில கோரிக்கைகளை வைத்தேன். அந்தக் கோரிக்கைகளில் முதல் கோரிக்கையாக நான் வைத்ததே, “கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்…

மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்” என்றுதான் கோரிக்கை வைத்தேன். ஞாபகம் இருக்கிறதா? அந்தக் கோரிக்கை மனுவையாவது இதுவரை படித்துப் பார்த்தீர்களா… எத்தனை கதைகள்… எத்தனை நாடகங்கள்… முதலில், ஆர்டிஐ விண்ணப்பம் செய்த 4 வேலை நாட்களில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் பற்றி எப்படி தகவல் கொடுத்தார்கள்? இரண்டாவது, இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர், 2015ல் வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்தபோது கொடுத்த தகவலில், கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக எப்போதும் இருந்ததில்லை என்று, பா.ஜ.க. அரசு தகவல் கொடுத்திருக்கிறது.

இப்போது தேர்தல் வருகிறது என்று தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி தகவலை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அந்தர் பல்டி ஏன்? மூன்றாவது, கடந்த பல ஆண்டுகளாக கச்சத்தீவு பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதெல்லாம், அதற்கு உரிய பதிலைச் சொல்லவில்லை. எத்தனையோ பேர் ஆர்டிஐ விண்ணப்பம் செய்தபோதும் தெளிவான தகவல்களைக் கொடுக்கவில்லை. உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கிறது என்று பதில் சொல்லாமல் இருந்த பா.ஜ.க. அரசு இப்போது ஆர்டிஐ மூலம் எப்படி தவறான தகவலைக் கொடுத்தார்கள்?

பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு தனிநபருக்கு எப்படி, வெளியுறவுத் துறை நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார்கள்? நான்காவது, கச்சத்தீவிற்காக இப்போது திடீர் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டுகளில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மீனவர்கள் கைது, துப்பாக்கிச்சூடு என்று நடந்ததே? ஒரு கண்டிப்பாவது இலங்கைக்குச் செய்தாரா? ஏன் செய்யவில்லை? இப்போது, சீனா பற்றியாவது வாய் திறந்தாரா? அருணாசலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்குச் சீனா சொந்தம் கொண்டாடுகிறதே?

30க்கும் மேற்பட்ட நம்முடைய இடங்களுக்குச் சீனமொழியில் பெயர்களை வெளியிட்டிருக்கிறதே? அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா? பிரதமர் மோடி அவர்களே… நீங்கள் போடும் நாடகம் எல்லாம் இன்னும் சிறிது நாட்களுக்குத்தான் என்பதை எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன். மோடியின் முகத்தில் தோல்வி பயம் அப்பட்டமாகத் தெரிகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக் கூடாததை எல்லாம் செய்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை ஆணையர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் முடியும் வரை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கிறோம் என்று சொல்லிப் பின்வாங்கியிருக்கிறார்கள். பா.ஜ.க.மேல் மக்கள் கோபம் நாளுக்கு நாள் அதிகமாகிறது என்று அவர்களுக்கு புரிந்துவிட்டது. அதனால்தான், அந்தர் பல்டி அடிக்கிறார்கள்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரைக் கைது செய்ததும் எவ்வளவு பெரிய தவறு என்று பா.ஜ.க. விரைவில் உணரத்தான் போகிறது. சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க.விடம் நீதி – நேர்மை நியாயம் என்ற எதையுமே எதிர்பார்க்கவில்லை… அதனால்தான், சட்டத்தின்மேல் நம்பிக்கை வைத்து நீதிமன்றங்களை நாடுகிறோம்… மாநிலங்களை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தலாம் என்பதில்தான் பா.ஜ.க.வின் மொத்தச் சிந்தனையும் இருக்கிறது…

ஒன்று, மாநிலங்களுக்கான நிதி தராமல் முடக்குவது… இல்லை என்றால், ஆளுநர்களை வைத்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் முடக்குவது… இந்த அநீதிகளை எதிர்த்து, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எல்லோரும் நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். நாமும் போயாகிவிட்டது. செய்தி 2 நாளில் வரும். பாருங்கள். நேற்றுகூட… கேரள மாநில அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்று வாதாடினார்கள். கர்நாடக அரசு நீதிமன்றம் சென்று வறட்சி நிவாரணம் தரச் சொல்லுமாறு வாதாடுகிறார்கள்.

நாமும் வெள்ள நிவாரணம் கேட்டுக் கேட்டுப் பார்த்தோம். தரவில்லை. நாளை காலை உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப் போகிறோம். பணம் தராதது மட்டுமல்ல, நமது மாநில அரசு தன்னுடைய நிதியில் இருந்து கொடுத்த பணத்தையும், பிச்சை என்று நக்கலடித்தார் பா.ஜ.க. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மாநில உரிமைகளுக்கான முழக்கத்தையும், கூட்டாட்சிக்கான குரலையும் தொடர்ந்து எழுப்புகிறோம்! அதற்கு நீதிமன்றம் போன்றே மக்கள் மன்றமும் இந்தத் தேர்தலில் நியாயத் தீர்ப்பு எழுத வேண்டும். தமிழுக்கும் – தமிழினத்திற்கும் – தமிழ்நாட்டிற்கும் விரோதமான கட்சி பா.ஜ.க. அதற்கு அளிக்கும் வாக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வைக்கும் வேட்டு என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. இரண்டையும் ஒரு சேர வீழ்த்துங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* பழைய சம்பவங்களைப் பற்றி பொய்யான கதைகளைச் சொல்லி, தேர்தல் ஆதாயம் அடைய முடியுமா என்று மோடி முயற்சி செய்கிறார். அதுதான் கச்சத்தீவு பிரச்னை. இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததைப் பற்றி இப்போது பா.ஜ. பேச ஆரம்பித்திருக்கிறது. ஆனால், இது அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. தேன்கூட்டில் கையை வைத்தது போல, இப்போது பா.ஜ. மாட்டிக் கொண்டு தவிக்கிறது.

* கேரள மாநில அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்று வாதாடினார்கள். கர்நாடக அரசு நீதிமன்றம் சென்று வறட்சி நிவாரணம் தரச் சொல்லுமாறு வாதாடுகிறார்கள். நாமும் வெள்ள நிவாரணம் கேட்டு, நாளை காலை உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப் போகிறோம்.

The post சீனா, இலங்கையை எதிர்க்க துணிச்சல் இல்லை கச்சத்தீவை பற்றி மோடி பேசலாமா? நாடகம் போடுவது இன்னும் சில நாட்களுக்குத்தான், வேலூர் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Modi ,Kachadhi ,China ,Sri Lanka ,Vellore Press Assembly ,Mu. K. Stalin ,Chennai ,Modi Kachadhi ,K. Stalin ,Khatti ,
× RELATED சொல்லிட்டாங்க…