×

ஓசூரில் வீடு வாடகைக்கு பார்ப்பது போல் நடித்து மூதாட்டியை கொன்று நகை பறித்த தம்பதி: சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

ஓசூர்: ஓசூரில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் நடித்து, மூதாட்டியை கொலை செய்து, அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை தம்பதி பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அலுவலக சாலையை சேர்ந்தவர் நஞ்சுண்டசெட்டி மனைவி சரளாதேவி (67). கணவர் இறந்த நிலையில், மகன் சுப்ரமணி (45), மருமகள் சியாமளா, பேரன்களுடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டின் மாடியில் வசித்து வருகின்றனர். கீழே உள்ள வீடு வாடகைக்கு விடப்படும் என விளம்பர பலகை வைத்திருந்தனர்.

இதனை பார்த்து வீடு வாடகைக்கு தேவைப்படுவதாக கூறி, கடந்த வெள்ளிக்கிழமை 35 வயது மதிக்கத்தக்க ஒரு தம்பதியினர் வந்துள்ளனர். அவர்கள் வீட்டை பார்த்துவிட்டு, திங்கட்கிழமை மீண்டும் வருவதாக கூறி சென்றுள்ளனர். அதன்படி, நேற்று வீட்டை பார்க்க வந்தனர். அப்போது, சுப்ரமணி, தன்னுடைய பேன்சி ஸ்டோருக்கு சென்று விட்டார். சியாமளா, கணவருக்கு மதிய சாப்பாடு எடுத்து சென்றுவிட்டார். வீட்டில் இருந்த சரளாதேவி, வந்தவர்களுக்கு வீட்டை சுற்றி காண்பித்துள்ளார். அப்போது, அவர்கள் திடீரென சரளாதேவியின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர். இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தம்பதி தப்பி சென்றனர்.

அந்த சமயம் பெங்களூருவில் வசிக்கும் சரளாதேவியின் மகள் சுபாஷினி, தாய்க்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்காததால், அவர் தனது போனில் இருந்து வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது, ஒரு ஆணும், பெண்ணும் வீட்டிலிருந்து வேக வேகமாக வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர், உடனடியாக, தம்பி சுப்ரமணிக்கு போன் செய்து வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, சரளாதேவி வாயில் துணி வைத்து அடைத்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சரளாதேவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிந்து வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியை கொலை செய்த தம்பதி, 5 பவுன் நகையை திருடிச்சென்ற சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஓசூரில் வீடு வாடகைக்கு பார்ப்பது போல் நடித்து மூதாட்டியை கொன்று நகை பறித்த தம்பதி: சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Hosur ,Nanjundasetty ,Hosur Taluk Office Road, Krishnagiri District ,
× RELATED ஓசூரில் வீடு வாடகைக்கு பார்ப்பது போல...