×

ஓசூரில் வீடு வாடகைக்கு பார்ப்பது போல நடித்து மூதாட்டியை கொன்று நகை பறித்த 4 பேர் கைது

*விசாரணையில் பரபரப்பு தகவல்

ஓசூர் : ஓசூரில், வீடு வாடகைக்கு பார்ப்பது போல நடித்து, பட்டப்பகலில் மூதாட்டியை கொன்று நகை பறித்த அக்கா-தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா அலுவலக சாலையைச் சேர்ந்தவர் சரளாதேவி(67). கணவர் இறந்த நிலையில், மகன் சுப்ரமணி(45), மருமகள் சியாமளா, பேரன்களுடன் வீட்டின் மாடியில் வசித்து வந்தார். கீழே உள்ள வீடு வாடகைக்கு விடப்படும் என விளம்பர பலகை வைத்திருந்தனர். இதனை பார்த்து, வீடு வாடகைக்கு தேவைப்படுவதாக கூறி, கடந்த 29ம் தேதி தம்பதி என கூறிக்கொண்டு 2 பேர் வந்தனர். அவர்கள் வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு, மீண்டும் வருவதாக கூறி விட்டு சென்றனர்.

பின்னர், கடந்த 1ம் தேதி சரளாதேவி மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்டு, வீட்டை சுற்றிப்பார்க்க வேண்டுமென கேட்டுள்ளனர். இதையடுத்து, சரளாதேவி கீழே இறங்கி வந்த போது, திடீரென அவரது வாயில் துணியை வைத்து அடைத்தனர். இதில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தம்பதி தப்பிச்சென்றனர். சிறிது நேரத்தில் சரளாதேவி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, விசாரணை நடத்தினர். இதில், அப்பகுதியில் வசித்து வரும் பாலாஜி(39) என்பவர் மீது சந்தேகம் வலுத்தது. அவரை பிடித்து விசாரித்ததில், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த திவாகர்(31), அவரது சகோதரி சுரேகா(34), சுரேகாவின் தோழி சாந்தி(34) ஆகியோருடன் சேர்ந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட போது, வாயில் துணியை அடைத்ததால், எதிர்பாராதவிதமாக சரளாதேவி உயிரிழந்தது தெரிய வந்தது.

கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகா எடவனஅள்ளி பகுதியைச் சேர்ந்த பாலாஜி, தனது பெற்றோருடன் சரளாதேவி வீட்டிற்கு அருகில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வந்த பாலாஜி, சரளாதேவி எப்போதும் நகை அணிந்தவாறு வலம் வருவதை பார்த்து, அவரிடம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார். இதுகுறித்து நண்பர் திவாகரிடம் தெரிவித்துள்ளார். அவரும் தனது சகோதரியின் தோழி சாந்தியுடன், வீடு வாடகைக்கு கேட்பது போல் வந்து நோட்டமிட்டு சென்று, நகை பறிக்கும் திட்டத்தை முடிவு செய்துள்ளார்.

அதன்படி, சரளாதேவி வீட்டில் தனியாக இருக்கும் நேரமாக பார்த்து, மயக்க மருந்து பாட்டிலுடன் சென்றுள்ளனர். வீட்டை காண்பிப்பதற்காக சரளாதேவி இறங்கி வந்த போது, மயக்க மருந்து தடவிய துணியை அவரது முகத்தில் அழுத்தியுள்ளனர். இதில், இவர் மயங்கி சரிந்ததும் கழுத்தில் கிடந்த நகையை பறித்துள்ளனர்.

அங்கிருந்து தப்பிச் செல்லும்போது, மயக்க மருந்து தடவிய துணியை வாயில் திணித்து விட்டுச் சென்றதால் சரளாதேவி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, பாலாஜியை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் கொடுத்த தகவலின்பேரில், திவாகர் மற்றும் சுரேகா, சாந்தி ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஓசூரில் வீடு வாடகைக்கு பார்ப்பது போல நடித்து மூதாட்டியை கொன்று நகை பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Hosur ,Hosur Taluk Office Road, Krishnagiri District ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்