×

‘வெளி உலகுக்கு தெரிய வேண்டும் என்பதால் இறக்கிறேன்’ நான்காவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை: கல்லூரியில் ஆசிரியர்கள் பாலியல் சீண்டலால் வேதனை

திருமலை: கல்லூரியில் ஆசிரியர்களின் பாலியல் சீண்டலால் வேதனை அடைந்த மாணவி ஒருவர், 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். என்னை போல பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வெளி உலகுக்கு தெரிய வேண்டும் என்று செல்போனில் உருக்கமான தகவலையும் பதிவு செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டம் நடவரம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளியின் மகள் ரூபாஸ்ரீ (17). விசாகப்பட்டினம் மாவட்டம் மதுரவாடா பி.எம். பாலத்தில் உள்ள தனியார் டிப்ளமோ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 28ம் தேதி ரூபாஸ்ரீ கல்லூரி முடிந்ததும் விடுதிக்கு வராததால் விடுதி நிர்வாகத்தினர் இரவு 10.30 மணிக்கு பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாணவியின் பெற்றோர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அன்று நள்ளிரவு 12.50 மணியளவில் ரூபாஸ்ரீ, தனது பெற்றோரின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதில் ‘இந்த கல்லூரியில் பாலியல் தொல்லைகள் அதிகம் உள்ளது அப்பா. ஆசிரியர்களிடம் சொல்லலாம் என்று நினைத்தால் துன்புறுத்துபவர்களில் ஆசிரியர்களும் உள்ளனர். அநாகரீகமான படங்கள் எடுத்து மிரட்டல் விடுக்கின்றனர். ஆசிரியர்கள் என்னையும், பல மாணவிகளையும் துன்புறுத்துகிறார்கள். யாரிடமும் சொல்ல முடியாமல் கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவிக்கிறோம் அப்பா. போலீசில் புகார் அளித்தால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டுகிறார்கள். யாராவது இறந்தால், இந்த விஷயம் வெளி உலகுக்கு தெரியும்.

அதனால்தான் நான் இந்த முடிவு எடுக்கிறேன். மன்னிக்கவும் அப்பா. இப்போது நான் இறந்தால் கொஞ்ச நாள் சோகமாக இருந்துவிட்டு என்னை மறந்து விடுவீர்கள். ஆனால் நான் இருந்தால் தினமும் என்னை பார்த்து நீங்கள் கவலை அடைய நேரிடும். உங்கள் அனைவரையும் புண்படுத்தியதற்கு மன்னிக்கவும். என்னை மறந்துவிடுங்கள். மன்னிக்கவும் அம்மா, அப்பா, என்னை பெற்று வளர்த்ததற்கு நன்றி. என் அத்தியாயம் முடிந்துவிட்டது. விரைவில் தாயாக போகும் அக்காவிற்கும் மாமாவிற்கும் வாழ்த்துக்கள். உங்கள் எதிர்காலத்தில் கவனம் செலுத்துங்கள். தங்கைக்கு, ‘நீ விரும்புவதை படிக்கவும். எப்போதும் மகிழ்ச்சியாக இரு’ என்று வாட்ஸ் ஆப் மூலம் மெசேஜ் அனுப்பி உள்ளார்.

அதன்பிறகு கல்லூரியின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனயடுத்து பெற்றோர் அளித்த புகாரின்படி பி.எம்.பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ‘வெளி உலகுக்கு தெரிய வேண்டும் என்பதால் இறக்கிறேன்’ நான்காவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை: கல்லூரியில் ஆசிரியர்கள் பாலியல் சீண்டலால் வேதனை appeared first on Dinakaran.

Tags : Tirumala ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ