×

ஒருபோதும் தேசிய கட்சிகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள்;அதிமுகவிற்கும் திமுகவிற்கும் பங்காளி சண்டைதான்: வேலூரில் எம்பி தம்பிதுரை பேச்சு

வேலூர், ஏப்.2: வேலூரில் அதிமுக தேர்தல் பணிமனையை திறந்து வைத்து எம்பி தம்பிதுரை பேசியதாவது: அதிமுகவின் கோட்டையாக உள்ள திண்டுக்கல் மற்றும் விருதுநகர் தொகுதிகளை கூட்டணி அமைய வேண்டும் என்பதற்காக மனமுவந்து விட்டுக் கொடுத்துள்ளோம். நாமெல்லாம் சகோதரர்களாக ஒற்றுமையாக இருந்து எதிரியை தோற்கடிக்க வேண்டும். திராவிட இயக்கத்திற்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது தமிழ்நாட்டின் வரலாறு.
தமிழ்நாட்டில் அதாவது சென்னை மாகாணமாக இருந்தபோது இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு முதல் தேர்தலில் காங்கிரசை தோற்கடித்தது தமிழக மக்கள். திராவிட இயக்கங்கள் போட்டியிடாத காலத்திலேயே தேசிய கட்சிகளுக்கு எதிராக வாக்களித்து மக்கள் தோற்கடித்த வரலாறு உள்ளது. 1952ம் ஆண்டு தேர்தலில் திராவிட இயக்கங்கள் சார்பில் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் போட்டியிடாத காலத்திலேயே தேசியக் கட்சிகளை தோற்கடித்த மாநிலம் தான் இந்த மாநிலம்.

தமிழ்நாட்டில் முதன்முதலாக காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது மைனாரிட்டி ஆட்சியாக தான் இருந்தது. பின்னர் தான் தமிழ்நாட்டில் காமராஜர் குடியாத்தத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழகத்தை பொறுத்தவரை தேர்தலில் போட்டி அதிமுகவிற்கும் திமுகவிற்கும் ஒழிய, தேசிய கட்சிகளுக்கு இல்லை. அதிமுகவிற்கும் திமுகவிற்கும் பங்காளி சண்டைதான். எனினும் ஒருபோதும் தேசிய கட்சிகளுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள்.
எப்படியாவது மந்திரியாகி விட வேண்டும் என்பதற்காக கடந்த முறை அதிமுகவில் நம்முடன் சேர்ந்து போட்டியிட்டவர், இப்போது எதிரணியில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். தாமரைச்சின்னம் தமிழ்நாட்டிலே வளராது. தமிழ்நாட்டிலே இரட்டை இலையை எல்லோருக்கும் தெரியுமே தவிர தாமரை ஒருவருக்கும் தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.

The post ஒருபோதும் தேசிய கட்சிகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள்;அதிமுகவிற்கும் திமுகவிற்கும் பங்காளி சண்டைதான்: வேலூரில் எம்பி தம்பிதுரை பேச்சு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,DMK ,Thambidurai ,Vellore ,Dindigul ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...