×

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விளம்பர போர்டு கேபிள் ஒயரில் சிக்கி 2 வாலிபர்கள் படுகாயம்; போலீசார் விசாரணை

வேலூர், ஏப்.2: வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விளம்பர போர்டு ஒயரில் சிக்கி 2 வாலிபர்கள் படுகாயமடைந்தன்ர. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர், கலெக்டர் அலுவலக மேம்பாலத்தில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சர்வீஸ் சாலை அருகில் சுமார் 50 அடி உயரத்தில் ராட்சத விளம்பரம் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர போர்டில் ஏற்கனவே இருந்த டிஜிட்டல் பேனரை மாற்றி புதிய பேனர் அமைக்கும் பணியில் 6 ஊழியர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர். அதில், 3 ஊழியர்கள் கீழே நின்று கொண்டிருந்த நிலையில், மேலே 3 ஊழியர்கள் ஏறி பேனரை கட்டி கொண்டிருந்தனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து அந்த விளம்பர போர்டில் கட்டப்பட்டிருந்த பைபர் கேபிள் ஓயர் அறுந்து கீழே விழுந்தது. அப்போது, காகிதப்பட்டறையில் இருந்து சத்துவாச்சாரி நோக்கி பைக்கில் வந்த காதிப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா(28), பால் வியாபாரி. இவர் அந்த கேபிள் ஒயரில் சிக்கி தூக்கி வீசப்பட்டார். இதில், கிருஷ்ணாவிற்கு தலையில் பலத்தகாயமடைந்து, வலிப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேநேரம், கணியம்பாடி அடுத்த கத்தாழம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(23), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சத்துவாச்சாரியில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு நோக்கி பைக்கில் சென்றார். அப்போது, அவரது கழுத்தில் அந்த கேபிள் ஓயர் மாட்டிகொண்டு பைக்கில் இருந்து கீழே விழுந்தார். ஒயர் மாட்டியதில் அவருக்கு கழுத்து, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. வெங்கடேஷ் வேலூர் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், பேனர் கட்ட வந்து கீழே நின்றுகொண்டிருந்த 3 பேர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். ஆத்திரமடைந்த அங்கு திரண்ட இளைஞர்கள் சிலர் 50 அடி உயரத்தில் மேலே பேனர் கட்டிக்கொண்டிருந்த 3 பேரையும் கீழே இறங்கச்சொல்லி சத்தம் போட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த 3 பேரும் கீழே இறங்கினால் தர்மடி விழும் என்ற பயத்தில் இறங்காமல் மேலே இருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த, வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். வேலூர் வடக்கு போலீசார், விளம்பர போர்ட்டில் இருந்த 3 பேரையும் பத்திரமாக இறக்கி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விளம்பர போர்டு கேபிள் ஒயரில் சிக்கி 2 வாலிபர்கள் படுகாயம்; போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vellore collector ,Vellore ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...