×

கேட்டை திறக்கும் போது கார் மீது இடித்ததால் தகராறு; வீடு புகுந்து கொலை மிரட்டல்.! நடிகை சரண்யா மீது பெண் புகார்

சென்னை: வீட்டின் கேட்டை திறக்கும் போது கார் மீது இடித்ததால் ஏற்பட்ட தகராறில், தன்னை வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது பக்கத்து வீட்டு பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரை சேர்ந்தவர் தேவி (38). இவர் நேற்று முன்தினம் மாலை காரில் மருத்துவமனைக்கு செல்வதற்காக வீட்டின் கேட்டை திறந்தார். அப்போது தேவி வீட்டின் அருகே சாலையில் நிறுத்தி வைத்திருந்த கார் மீது கேட் இடித்து கார் சற்று சேதமானதாக கூறப்படுகிறது.

இதனால் காரின் உரிமையாளரான பக்கத்து வீட்டில் வசிக்கும் நடிகை சரண்யா பொன்வண்ணன் நடந்த சம்பவம் குறித்து தேவி வீட்டிற்கு சென்று கார் சேதமடைந்தது குறித்து கேட்டுள்ளார். இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சரண்யா பொன்வண்ணன், ஸ்ரீதேவியை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேவி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார், நடந்த சம்பவத்தின் உண்மை தன்மையை அறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் நடிகை ஒருவர் வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கேட்டை திறக்கும் போது கார் மீது இடித்ததால் தகராறு; வீடு புகுந்து கொலை மிரட்டல்.! நடிகை சரண்யா மீது பெண் புகார் appeared first on Dinakaran.

Tags : Saranya ,CHENNAI ,Saranya Ponvannan ,Virugambakkam Padmavathi, Chennai ,
× RELATED அசாமில் கன சுரக்‌ஷா கட்சி எம்.பி. நபா...