சென்னை: தேர்தல் விதிகளை மீறி சாலையை சேதப்படுத்தி கொடி கம்பம் நட்டதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் படி நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி மேற்கு மாம்பலம் ரெட்டி குப்பம் சாலையில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்திற்கு சைதாப்பேட்டை நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுகுமாரன் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் நடந்த சாலையின் இருபுறமும் தேர்தல் விதிகளை மீறி சேதப்படுத்தி கொடி கம்பங்கள் நட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி கார்த்திகேயன், குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் சைதாப்பேட்டை நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுகுமாரன் மீது பொது சொத்துக்களை சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தேர்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது வழக்கு appeared first on Dinakaran.