×

180 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்டு சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது: மோசமான வானிலையால் நடவடிக்கை

சென்னை: சென்னையில் இருந்து 180 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்டுச் சென்ற தனியார் பயணிகள் விமானம், அந்தமானில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அந்தமானில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் தனியார் பயணிகள் விமானம் நேற்று பகல் ஒரு மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் புறப்பட தயாராகிக்கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 180 பயணிகள் அமர்ந்து விட்டனர்.

ஆனால் அந்தமானில், மோசமான வானிலை நிலவியதன் காரணமாக, விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் புறப்பட்டுச் சென்றது. மாலை 4.30 மணியளவில் அந்த விமானம் அந்தமான் வான்வெளியை நெருங்கியது. ஆனால் அந்தமானில் கடுமையான தரைக்காற்று வீசிக்கொண்டு, மோசமான வானிலை நிலவியது.

இந்த நிலையில் விமானத்தை அந்தமானில் தரை இறக்க முடியாமல், நீண்ட நேரம் விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. ஆனால் வானிலை சீரடையவில்லை. இதனையடுத்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக்கொண்டு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அந்த விமானம் 180 பயணிகளுடன் இரவு 7 மணிக்கு மீண்டும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கியது.

இதனையடுத்து பயணிகள், விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் விமானம் தரையிறங்க முடியவில்லை. எனவே விமானம் ரத்து செய்யப்படுகிறது. நாளை (இன்று) விமானம் மீண்டும் அந்தமான் செல்லும். பயணிகள் இதே விமான டிக்கெட்டுகளில் நாளையோ (இன்றோ) அல்லது விருப்பப்பட்ட வேறு ஒரு நாளிலோ, அந்தமானுக்கு பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தனர்.

ஆனால் பயணிகள் பலர், அதை ஏற்றுக் கொள்ளாமல் வாக்குவாதம் செய்தனர். பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதியே, விமானம் சென்னையில் இருந்து அந்தமானுக்கு தாமதமாக புறப்பட்டுச் சென்றது என்று கூறி, பயணிகளை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். அதன்பின்பு பயணிகள், தங்களுடைய விமான டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு மாற்றிக் கொண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றனர்.

The post 180 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்டு சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது: மோசமான வானிலையால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Andaman ,Chennai ,Andaman… ,Dinakaran ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...