×

பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார்; தமிழகத்தில் கட்சியை குழிதோண்டி புதைத்து வருகிறார் அண்ணாமலை: மாநில நிர்வாகி தடா பெரியசாமி குற்றச்சாட்டு

சென்னை: பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி, சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்திருந்தார். இவர், விசிகவில் திருமாவளவனுக்கு அடுத்த நிலையில் இருந்தார். மேலும், சிதம்பரம் தொகுதி தடா பெரியசாமிக்கு சொந்த ஊர். அவருக்கு சீட் கிடைக்கவில்லை. வேலூரைச் சேர்ந்த கார்த்தியாயினிக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால், அதிருப்தியில் அக்கட்சியிலிருந்து விலகி, நேற்று காலை சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். பின்னர் தடா பெரியசாமி அளித்த பேட்டி: விரைவில் எனது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைவார்கள். சிதம்பரம் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு பிரசாரம் செய்வேன்.

பட்டியலின தலைவரான எனக்கே மரியாதை இல்லாதபோது எப்படி பட்டியலின சமுதாயத்திற்கு பாஜவில் மரியாதை இருக்கும். இதற்கு முழு காரணம் மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல் முருகன், கேசவவிநாயகம் 3 நபர்கள் தான். மாநில நிர்வாகிகள் கோர் டீம் என்ற அமைப்பை உருவாக்கி அவர்களுக்கு தேவையான சீட்டை பிரித்துக்கொள்கின்றனர். இது எந்த அளவிற்கு கொடுமையானது. சமூக நீதி என்று பாஜ கூறுகிறது. அப்படியென்றால் வேலூர் அருகில் அந்த பெண்ணிற்கு பொதுத்தொகுதி கொடுத்து இருக்க வேண்டும். எனக்கு தொகுதி தரவில்லை என்று நான் வருத்தப்படவில்லை. பட்டியலின சமுதாயத்தை மதிக்கவில்லை என்று தான் கவலை. அண்ணாமலை செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் பாஜவை குழிதோண்டி புதைக்கும் பணியை அண்ணாமலை செய்து வருகிறார்.

The post பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார்; தமிழகத்தில் கட்சியை குழிதோண்டி புதைத்து வருகிறார் அண்ணாமலை: மாநில நிர்வாகி தடா பெரியசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,AIADMK ,Annamalai ,Tamil Nadu ,Tada Periyasamy ,Chennai ,Chidambaram ,Thirumavalavan ,Vishika ,Tada Periasamy ,Tada Periaswamy ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...