×

ஓ… இதுதான் உங்க தொலைநோக்கு பார்வையா..? பைனாகுலர் மூடியை கழட்டாமலேயே எம்பியை தேடிய அதிமுக வேட்பாளர்

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர் சரவணன் பைனாகுலருடன் பேச வந்தார். அப்போது அதனை கண்ணில் வைத்து பார்த்தபடியே, ‘‘மார்க்சிஸ்ட் வேட்பாளர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்காரே. அந்த திட்டங்களெல்லாம் நடந்திருக்கான்னு பார்க்கிறதுக்காக நான் பைனாகுலருடன் வந்திருக்கேன். பைனாகுலர் மூலம் தேடிப்பார்க்கிறேன். பத்திரிக்கையாளர்கள் தெரிகிறார்கள், கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் தொண்டர்கள் தெரிகிறார்கள். ஆனால் சு.வெங்கடேசன் கொண்டு வந்த திட்டங்கள் தெரியவில்லை. எங்கயாவது, அவர் செஞ்ச திட்டங்கள் கண்ணில் படுதான்னு? பைனாகுலர் மூலம் பார்த்துக்கிட்டு இருக்கேன்’’ எனக்கூறினார்.

அவர் பைனாகுலரை வைத்து பேசும்போது இரு பக்க மூடியும் திறக்காமல் அப்படியே இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து பேசிய அவர், ‘‘தூரத்தில் பாலம் தெரியுது. இந்த பாலமெல்லாம் கட்டி 30, 40 வருடம் ஆச்சு. அதுக்கு வெள்ளை அடிச்சு ஒரு வேளை கல்வெட்டு வச்சுட்டாரான்னு ஒரு சந்தேகம். அப்படி ஒரு திட்டத்தையும் செய்யலை…’’ என்று பேசினார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வரும் நெட்டிசன்கள் ‘‘ஓ.. இதுதான் அதிமுகவினரின் தொலைநோக்கு பார்வையா..? பரவாயில்லையே… பைனாகுலர் மூடியை திறக்காமலே டாக்டர் தொலைநோக்கு பார்வையிலே எல்லாத்தையும் பார்த்துடுறாரே… ஒருவேளை எக்ஸ்ரே கண்ணா இருக்குமோ… சூப்பர்’’ என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

என்னது… பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறிருச்சா? அண்ணாமலை கூறியது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக்; மன்சூர் அலிகான் ‘கலாய்’
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் வேட்பாளரும் நடிகருமான மன்சூர் அலிகான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறி இருப்பதாக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதைவிட ஒரு பெரிய ஜோக் இல்லை. இந்தியா முன்னேறிவிட்டதுப்பா, எல்லாரும் சிரிங்கப்பா, இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஜோக் இதுதான். எப்படி இப்படியெல்லாம் அண்ணாமலை பேசுறார். அதற்கு தான் ஐபிஎஸ் படிச்சிருக்கிறாரா?. 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கிறேன் என்று ஒன்றிய பாஜ அரசு சொன்னார்கள் கொடுக்கவில்லை.

ஆனால் தற்போது அதானி, அம்பானி பொருளாதாரம் தான் முன்னேறி உள்ளது. இங்க வாய்ப்பு இல்லாமல் பிச்சைக்காரர்களாக உள்ளார்கள். பொருளாதாரம் பற்றி அண்ணாமலைக்கு சவால் விடுக்கிறேன். மக்கள் முன் பேச தயார். மக்களிடம் வரவேற்பு யாருக்கு உள்ளது என்று பார்ப்போம். நாடகத் தேர்தல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தான் நான் வேலூரில் போட்டியிடுகிறேன். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியையும், பிரயங்கா காந்தியையும் முன்மொழிகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஓ… இதுதான் உங்க தொலைநோக்கு பார்வையா..? பைனாகுலர் மூடியை கழட்டாமலேயே எம்பியை தேடிய அதிமுக வேட்பாளர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Dr. ,Saravanan ,Madurai Parliamentary Constituency ,Edappadi Palaniswami ,Madurai ,Palangantham ,Dinakaran ,
× RELATED ‘மருமகளே… மருமகளே… வா வா…’ பிரேமலதாவை வரவேற்ற செல்லூர் ராஜூ