×

‘மருமகளே… மருமகளே… வா வா…’ பிரேமலதாவை வரவேற்ற செல்லூர் ராஜூ

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பேச மதுரை பெத்தானியபுரம் பிரசார கூட்டத்திற்கு நேற்று வருகை தர 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதமானது. வெயிலால் கூட்டம் கலைந்ததைக் கண்ட செல்லூர் ராஜூ திடீரென மைக்கை வாங்கி பேச ஆரம்பித்தார். ‘‘பகல் 12 மணிக்கு மேலதான் வெயிலடித்தால் தப்பு. இந்த நேரத்து வெயில் உடம்புக்கு நல்லது. இந்த நேரத்தில் வைட்டமின் டி அதிகரிக்கும். என்ன டாக்டர் சரிதானே? வேட்பாளரான எம்எஸ் படித்த டாக்டரிமே கேட்டாச்சு’’ எனக்கூறி சமாளித்தார். தொடர்ந்து பேசியவர், ‘‘அண்ணியார் வந்துகொண்டிருக்கிறார்.

பெண்கள் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுங்க. நிழல்ல நில்லுங்க. வந்ததும் ஜோராக குலவை போடுங்க. அவங்க நம்ம ஊரு மருமகள். 2 சிங்கக்குட்டிகள், ஒரு சிங்கக்குட்டிக்கு வாக்கு கேட்டு அண்ணியார் பேசிட்டு வர்றாங்க… அதான் லேட்டு. அவங்க வந்ததும், ‘மருமகளே மருமகளே வாவா’ன்னு அந்த பாட்டை பாடி வரவேற்போமா? எப்படி பாடணும்னும் தெரியும்ல… மருமகளே மருமகளே வா வா.. உன் வலது காலை எடுத்து வைத்து வா வா-ன்னு பாடணும்’’ என்றபடி செல்லூர் ராஜூவும் பாட்டுப்பாடி காட்டினார். ‘மணமகளே… மருமகளே வா… வா…’ என்ற பாடலை மாற்றிப்பாடி மிரட்டினார்.

தொடர்ந்து பொதுமக்களை பார்த்து, ‘‘எல்லோரும் வெயில்ல நிற்கிறீங்க… பெண்களே… என்னப்பா சொல்லுங்கப்பா… ஆமாப்பா என்னப்பா இப்படி செய்றாங்க, தேர்தல்னா காசைக்கொடுத்து அவங்க பாட்டுக்கு கூட்டி வந்துடுறாங்க… நம்மளப்போட்டு இப்படி பண்ணிடுறாங்க’’ என்று பொதுமக்கள் மனதில் நினைப்பதையும் செல்லூர் ராஜூ பேசியதுடன், ‘‘ஒரு ஆட்டத்தைப் போடுங்கப்பா’’ என்று பெண்களைப் பார்த்து சொல்ல, ‘‘வாராரு வாராரு அழகர் வாராரு’’ என்ற பாடலுக்கு அங்கிருந்த முதிய பெண்கள் நடனமாடி அசத்தினர். பிரசார வாகனத்தில் நின்றபடியே செல்லூர் ராஜூவும் உற்சாகத்தோடு கைகளை ஆட்டி நடனமாடினார்.

The post ‘மருமகளே… மருமகளே… வா வா…’ பிரேமலதாவை வரவேற்ற செல்லூர் ராஜூ appeared first on Dinakaran.

Tags : Sellur Raju ,Premalatha ,DMDK ,General Secretary ,Premalatha Vijayakanth ,Madurai Bethaniapuram ,AIADMK ,Dr. ,Saravanan ,
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…