×

ஜூன் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்; பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்: கலெக்டர் வேண்டுகோள்

வேலூர்: ஜூன் மாதம் வரை ெவப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்பதால் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 16ம்தேதி தெரிவித்தது. வேலூர் மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். போதுமான இடைவெளியில் தேவையான அளவு குடிநீரைப் பருக வேண்டும். கோடை காலத்தில் எடை குறைவான, தளர்வான நுண்ணிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பாதுகாப்பு கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணிகளை அணிந்து வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கடினமான பணிகளை தவிர்ப்பது நல்லது. பயணங்களின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் மது, தேநீர் மற்றும் கார்பன் கலந்த குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள் மற்றும் பழைய உணவுகளை எடுத்து கொள்ளக்கூடாது.

வெயில் நேரங்களில் வெட்ட வெளியில் பணிபுரியும்போது தலை, கழுத்து, முகம் மற்றும் கை, கால் பகுதிகளில் குடை, தொப்பி மற்றும் ஈரமான துணிகளை பயன்படுத்தி வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ளலாம். வெயில் நேரங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது குழந்தைகள் மற்றும் செல்லபிராணிகளை வாகனத்தில் விட்டு செல்லக்கூடாது. மயக்கம் அல்லது மிகுந்த உடற்சோர்வு காணப்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.

உடலில் நீர்சத்தை அதிகரிக்கும் ஓ.ஆர்.எஸ் கரைசல், லஸ்ஸி, எலுமிச்சை பழச்சாறு, மோர் போன்ற உணவு பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும். கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் வைக்கவும், போதுமான அளவு தண்ணீர் வழங்கவும் வேண்டும். எனவே கோடை வெப்பத்தின்போது மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வெப்ப பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டால்…
வெப்பத்தினால் ஒருவருக்கு வெப்ப பக்கவாதம் ஏற்பட்டால் அவரை உடனடியாக நிழற்பாங்கான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். உடனடியாக ஈரத்துணியால் அவரது உடலை துடைக்க வேண்டும். தலையில் சாதாரண தண்ணீரை ஊற்றி பாதிக்கப்பட்டவரின் உடல் வெப்பநிலையைக் குறைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு ஓஆர்எஸ் கரைசல் அல்லது எலுமிச்சை சாறு அல்லது நீர்சத்தை அதிகரிக்கக்கூடிய திரவப் பொருட்களை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

The post ஜூன் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்; பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்: கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...