×

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பி.ஆர்.எஸ். தலைவர் கவிதாவுக்கு ஏப்.9 வரை நீதிமன்ற காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கவிதாவை 14 நாள் நீதிமன்ற காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளும், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர்களில் ஒருவருமான கவிதா(46) மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.

இந்த வழக்கில் கடந்த 15ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கவிதாவை மார்ச் 23 வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து அவரது அமலாக்கத்துறை காவல் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அமலாக்கத்துறை காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை காவலை நீட்டிக்க அதிகாரிகள் கோரவில்லை. இதையடுத்து கவிதாவை ஏப்ரல் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா உத்தரவு பிறப்பித்தார்.நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

* பொய் வழக்கு கவிதா குற்றச்சாட்டு
நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, “இது எங்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு. இதில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.

The post டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பி.ஆர்.எஸ். தலைவர் கவிதாவுக்கு ஏப்.9 வரை நீதிமன்ற காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : PRS ,Delhi ,Kavitha ,Delhi Special Court ,New Delhi ,Kavita ,Former ,Telangana ,Chief Minister ,K. Chandrasekhara Rao ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால், கவிதாவுக்கு மே.7 வரை காவல் நீட்டிப்பு